Last Updated:
உத்தர பிரதேசத்தில் காதலியை கொலை செய்துவிட்டு சட்டக் கல்லூரி மாணவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
உத்தர பிரதேசம், மாநிலம் பதேபூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்பால். சட்டக் கல்லூரி மாணவரான இவர் ராஹி என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே உறவு மேம்பட்டதால் திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளனர்.
ஆனால், இருவரும் திருமணம் செய்யாமல் கணவன், மனைவி போன்று கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்றாக வசித்ததாக கூறப்படுகிறது. அண்மைக் காலமாக ராஹி தனது நண்பர்கள் இருவருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார்.
ஆண் நண்பர்களுடன் பேசுவது தனக்கு பிடிக்கவில்லை என்று ராஜ்பால் கண்டித்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அதிகம் சட்டம் பேசியதால் ஆத்திரமடைந்த இளம்பெண், உன் மீது பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்து சிறைக்குள் தள்ளிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
அதற்கு காதலன் என்றும் பார்க்காமல் தன் மீதே பாலியல் வன்கொடுமை வழக்கு தொடருவாயா என்று ராஜ்பால் கேட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் பாலியல் வழக்கு தொடுப்பதற்கு பதில் உன்னை கொன்றுவிட்டு கொலை வழக்கில் சிறை செல்வேன் என்று மிரட்டியுள்ளார்.
தொடர்ந்து மோதல் போக்கு அதிகரித்ததால் ஆத்திரமடைந்த இளைஞர், தனது காதலியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், நேராக காவல் நிலையம் சென்று நடந்ததை கூறி சரணடைந்துள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் விரைந்து சென்று இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்து சட்டக் கல்லூரி மாணவர் ராஜ்பாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். காதலி மீது கொண்ட சந்தேகத்தில் ஏற்பட்ட சண்டையில் காதலனே அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பதேபூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
May 10, 2026 10:16 PM IST


