மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்குமான வாக்குப் பதிவு முடிந்து இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்தத் தேர்தலில், ஆளும் கூட்டணி அரசான பா.ஜ.க – சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியோடும், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணியாகவும் தேர்தலைச் சந்தித்தன.
மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மையாக 145 இடங்கள் தேவை. இதில், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 227 இடங்களில் வெற்றி, 8 இடங்களில் முன்னிலை என 235 இடங்களை தன் வசம் வைத்துள்ளது. அதேபோல், காங்கிரஸ் கூட்டணியான மகா விகாஸ் அகாடி 46 இடங்களில் வெற்றி, 3 இடங்களில் முன்னிலை என மொத்தம் 49 இடங்களை தன் வசம் வைத்துள்ளது.
பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை காட்டிலும் அதிக இடங்களை வென்று பாஜக கூட்டணியான மகாயுதி கூட்டணி மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து டெல்லியில் பாஜக அலுவலகத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அந்த உரையில் அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார்.
பிரதமர் மோடி பேசியதாவது; “அம்பேத்கர், நமக்கு வழங்கிய அரசியல் அமைப்பில் வக்ஃப் வாரிய சட்டத்திற்கு இடம் இல்லை. ஆனால், காங்கிரஸ் தனது வாக்கு வங்கி அரசியலுக்காக அதனைத் தொடர்ந்து ஆதரிக்கிறது. அதிகாரத்தின் பசியால் காங்கிரஸ் குடும்பம், அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள மதச்சார்பற்ற மதிப்புகளை அழித்துவிட்டது.
இதையும் படியுங்கள் :
Maharashtra Election Results: பாஜக கூட்டணியில் முதல்வர் தேர்வில் சர்ச்சையா? – ஃபட்னாவிஸ் விளக்கம்!
2014ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து டெல்லி அருகே உள்ள பல நிலங்களை வக்பு வாரியத்துக்கு காங்கிரஸ் கொடுத்தது.
காங்கிரஸ் குடும்பத்தின் வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக மதச்சார்பின்மை என்ற பெயரில் வக்பு வாரியத்தை உருவாக்கியது காங்கிரஸ்” என்று பேசினார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
