Last Updated:
புதுச்சேரியில் இந்தியா கூட்டணி தோல்வி அடைந்ததற்கு காங்கிரஸ் பொறுப்பேற்பதாகத் தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, தோல்விக்காகக் காங்கிரஸ் மீது பழிபோடும் கூட்டணிக் கட்சியினருக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தோல்விக்கு காங்கிரசை குறை சொல்ல கூடாது என்றும், திமுக சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டியளித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசுகையில், “புதுச்சேரியில் இந்தியா கூட்டணி தோல்வி அடைந்தததற்கு பொறுப்பை ஏற்றுள்ளோம். கூட்டணி கட்சியை சேர்ந்த சிலர் காங்கிரஸ் கட்சி மீது தோல்விக்கு பழி போட்டு சேற்றை பூசுவது போல் விமர்சனம் செய்கிறார்கள். கூட்டணி தலைவர்களின் பேராசை காரணமாக தோல்வி ஏற்பட்டுள்ளது. இது புதுச்சேரி மக்களுக்கு தெரியும். தொகுதி பிரிப்பதில் பிரச்சினையும், காலதாமதமும் ஓர் காரணம்.
காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டதாக குறைகூறுகிறார்கள். தேர்தலில் புதுச்சேரியில் இந்தியா கூட்டணி வெல்லும் தொகுதிகளில் தவெக கணிசமான வாக்கு பெற்றதால் தோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸை விமர்சிப்பது புதுச்சேரி மக்களை விமர்சிப்பதற்கு சமம். தோல்வி எதனால் என திமுக சுய பரிசோதனை செய்ய வேண்டும். காங்கிரஸை குறை கூறுவதால் அவர்கள் செய்த தவறை மறைக்கவோ, மறக்கவோ முடியாது. தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட ஒரு சில தலைவர்கள் மிகைப்படுத்தி பேசி அழுத்தம் தந்ததால் கூட்டணி பேச்சுவார்த்தை காலதாமதம் ஏற்பட்டு கடைசி நேரத்தில் கையிலிருந்த ஆட்சியை விட்டு விட்டோம்.
இதற்கு கூட்டணி கட்சிகளில் பிரதான கட்சிகள் பொறுப்பு ஏற்கவேண்டும். தோல்விக்கு நாங்கள் பொறுப்பு ஏற்றதுபோல் இதர கட்சிகளுக்கும் பெருந்தன்மையோடு பொறுப்பு ஏற்க வேண்டும். கூட்டணியில் சில கட்சிகள் சேர்வதும், பிரிவதும் அரசியல் நடக்கும் நிலவரங்கள் தான். இதற்காக காங்கிரசை திமுக விமர்சிப்பதை ஏற்க முடியாது. இப்படி பேசினால் மனக்கசப்பு ஏற்படும். அரசியலில் சூழல் எப்போது வேண்டுமானாலும் மாறும். தனிப்பட்ட வெறுப்பு இருக்கக்கூடாது. தாங்கள் புனிதர்கள் போலவும், காங்கிரஸ் துரோகம் செய்தது போலவும் மக்கள் மத்தியில் பிரம்மையை ஏற்படுத்தக்கூடாது. யாரின் பேராசையால் ஆட்சியை இழந்தோம் என்பது மக்களுக்கு தெரியும்.
புதுச்சேரியில் அரசு பணிகள் ஸ்தம்பித்த நிலை ஏற்பட்டு கோப்புகள் அலுவலகத்தில் தூங்குகிறது. அமைச்சரவையை முழுமையாக நியமிக்கவில்லை. 2 அமைச்சர்களுக்கு இலாக்கா ஒதுக்கப்படவில்லை. காலதாமதத்துக்கான காரணம் என்ன என்பதை முதலமைச்சர் ரங்கசாமி விளக்க வேண்டும். 5 மாநிலங்களில் தேர்தல் முடிந்து பதவி ஏற்று பணியை துவங்கி விட்டனர். புதுச்சேரியில் தாமதம் ஏன்?. யார் காரணம்?.” என
நாராயணசாமி கேள்விகளை எழுப்பினார்.
“காங்கிரசை குறை சொல்லக் கூடாது.. திமுக சுய பரிசோதனை செய்ய வேண்டும்..” புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி!


