
அடுத்த ஐந்து ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை சர்வதேச காலநிலை வரம்பை மீண்டும் மீண்டும் தாண்டும் என்றும், 2024-இல் பதிவான வெப்பமான ஆண்டை விட 2027 அதிக வெப்பமாக இருக்கும் என்றும் உலக வானிலை அமைப்பின் புதிய கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை மீண்டும் மீண்டும் சர்வதேச காலநிலை வரம்பைத் தாண்டும் என்றும், வெப்பமான ஆண்டுக்கான சாதனை உடையும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் புதிய காலநிலை கணிப்புகள் எச்சரிக்கின்றன.
உலக வானிலை அமைப்பு (WMO) மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் வானிலை மையம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, 2026 முதல் 2030 வரையிலான காலகட்டத்தில் உலகின் சராசரி வெப்பநிலை, தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்தை விட 1.5 டிகிரி செல்சியஸுக்கும் (2.7 ஃபாரன்ஹீட்) அதிகமாக இருப்பதற்கான 75 சதவீத வாய்ப்பு உள்ளதாகக் கூறுகிறது.
2015-ம் ஆண்டு பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் 20 ஆண்டுகால சராசரியாக நிர்ணயிக்கப்பட்ட இந்த எல்லை, ஒருமுறை தாண்டுவது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது ஒரு ஆண்டாவது 1.5 டிகிரி எல்லையைத் தாண்டுவதற்கு 91 சதவீத வாய்ப்பும், 2024-ம் ஆண்டில் பதிவான பூமியின் வெப்பமான ஆண்டின் சாதனையை ஒரு ஆண்டு உடைப்பதற்கு 86 சதவீத வாய்ப்பும் இருப்பதாக WMO அறிக்கை தெரிவிக்கிறது.
2030-க்குள் ஒவ்வோர் ஆண்டும் 1.3 முதல் 1.9 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலை பதிவாகும். ஐக்கிய இராச்சிய வானிலை மையத்தின் காலநிலை விஞ்ஞானி மெலிசா சீப்ரூக், 1.5 டிகிரி எல்லை ஒரு ‘கடும் படுகுழி’ அல்ல, ஒவ்வொரு 0.1 டிகிரியும் மேலும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கின்றார்.
ஐரோப்பாவில் இந்த வாரம் இளவேனிற்காலத்தில் ஏற்பட்ட திடீர் வெப்பத்தை இதற்கு உதாரணமாகக் குறிப்பிட்டார்.
இதேவேளை, 1.5 டிகிரி எல்லைக்கு மேலான ஒரு வருடம் அல்லது அதற்கும் அதிகமான காலம், மிகக் கடுமையான வெப்ப, மழை, வறட்சி நிகழ்வுகளை ஏற்படுத்தும், இது நகர்ப்புறத் திட்டமிடல் மற்றும் விவசாயத்தின் எதிர்பார்ப்புகளை மீறும், இதனால் பலர் உயிரிழப்பார்கள், உணவு விலைகள் அதிர்ச்சியடையும், காட்டுத் தீ மூளும் என்று எச்சரிக்கின்றார் இம்பீரியல் கல்லூரி லண்டனின் காலநிலை விஞ்ஞானி ஃபிரடெரிக் ஓட்டோ.
ஏற்கெனவே உலகளவில் வெப்பநிலை உயர்வைத் தூண்டும் எல் நினோ நிகழ்வு விரைவில் உருவாகி 2028 வரை நீடிக்கும். இதன் காரணமாக, 2027-ம் ஆண்டு 2024-ன் வெப்ப சாதனையை முறியடிக்கும் என சீப்ரூக் கணித்துள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகளின் சராசரி 1.5 டிகிரியைத் தாண்டினால், ஒரு தசாப்தத்தில் பூமி 0.45 டிகிரி ஃபாரன்ஹீட் (0.25 டிகிரி செல்சியஸ்) வெப்பமடையும், இது முந்தைய வெப்பமயத்தை விட வேகமானதாக காணப்படும்.
ஆர்க்டிக் பகுதி உலகின் ஏனைய பகுதிகளை விட 3.5 மடங்கு வேகமாக வெப்பமடையும். பனியும் பனிமலையும் குறைவதால் சூரியக் கதிர்வீச்சு விண்வெளிக்குத் தெறித்துச் செல்வது குறைகிறது, இது ஒரு தீய சுழற்சியை உருவாக்குகிறது. அடுத்த ஐந்து குளிர்காலங்கள், 1991-2020 சராசரியை விட 5.1 டிகிரி ஃபாரன்ஹீட் (2.8 டிகிரி செல்சியஸ்) வெப்பமாக இருக்கும்.
அமேசான் படுகையில் வழக்கத்தை விட வெப்பமான மற்றும் வறண்ட நிலைமைகள் ஏற்படும், இது காட்டுத் தீ அபாயத்தை அதிகரித்து, தற்போது கார்பனை உறிஞ்சும் அமேசானை, பிரச்சனையை மோசமாக்கும் பகுதியாக மாற்றும். ஆப்பிரிக்காவின் சாஹேல் பகுதியில் வழக்கத்தை விட அதிக மழை பெய்யும், வெள்ள அபாயம் உள்ளது.
ஐ.நா. காலநிலைத் தலைவர் சைமன் ஸ்டீல், உலக வெப்பமயம் மனித முயற்சிகளை விட வேகமாக நிகழ்வதாகவும், நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயுவை எரிப்பதால் ஏற்படும் கொடிய மனித மற்றும் பொருளாதார பாதிப்புகளை ஐரோப்பா, இந்தியா போன்ற நாடுகளில் காண முடிவதாகவும், ஒவ்வொரு நாடும் இந்த உலகளாவிய காலநிலை நெருக்கடியால் பெரும் விலையைச் செலுத்தி வருவதாகவும் கூறுகின்றார்.
