அமெரிக்க கறுப்பினப் போராளி மால்கம் X பற்றிய பேச்சு எழுந்ததால், லூயிஸ் மிஷாவ்வுக்கும் மால்கமுக்குமான நெருக்கம் பற்றிய தகவல்களோடு, நேர்காணல் சுவாரஸ்யமாகப் போவதாக நினைத்தேன்.
ஆனால், மிஷாவ் தன் மனைவியின் பெயரை மாற்றிக் கூறியதால் சற்றுக் குழம்பிப் போனேன். அது என்னுடைய நேர்காணலை தடம் மாற்றிவிட்டது. அந்த மருத்துவமனை அறையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த லூயிஸ் மிஷாவ்வுக்கு தாதியைப்போல பணிவிடை செய்துகொண்டு அவருடைய மகளைப் போல இருந்த பெண்மணி என்னைப் பார்த்து, `பேசலாமா?’ என்பதுபோல சைகையால் அனுமதிகேட்டார். நானும் தலையசைத்தேன்.

“என்னோட பேரு பெட்டி லோகன் (Bettie Logan). 1952-ம் வருஷம்னு நினைக்கிறேன். நான் தெரஸா ஹோட்டல்ல அப்போ தங்கியிருந்தேன். நான் தங்கியிருந்த விடுதிக்கு அருகிலேயே இருந்த தேசிய நினைவு ஆஃப்ரிக்க புத்தகக் கடை பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் ஒரு தடவைகூட அங்க போனதில்ல. அதனால, இந்த முறை போய்விடலாம்னுதான் கடைக்குள்ள போனேன். பிரமிப்பா இருந்துச்சு. கடைக்குள்ள போன உடனேயே கறுப்பர்களுக்கான முக்கியமான இடம் இது அப்படிங்கிற எண்ணம் உள்ளத்துல ஏற்பட்டுச்சு. ஆனா, வெள்ளைக்காரங்களும் அந்தக் கடைக்கு வந்தாங்க. குறிப்பா கறுப்பர்கள் தொடர்பா ரொம்ப ரொம்ப அரிதான புத்தகங்களெல்லாம் அங்க இருந்துச்சு.
அதேபோல கடை முதலாளி லூயிஸ் மிஷாவ், சுண்டி இழுக்கக்கூடிய அற்புதமான மனிதராக அப்போது தெரிந்தார்…” அவர் இப்படி சொல்லி முடிப்பதற்குள், “இப்போ அப்படி தெரியலையா மேடம்?” என மிஷாவ் இடைமறித்து சிரிக்கவும், மெலிதாக புன்னகைத்த பெட்டி, “சொல்லி முடிக்க விடுங்க சார்…” என அவரிடம் கொஞ்சவும், எனக்கு இலேசாக புரிய ஆரம்பித்தது. அந்த இளைஞனும் சிரித்தான், அவனும் இந்தக் கதையைக் கேட்க ஆர்வமானான்.

“அந்தக் கடையின் உரிமையாளர் மிஷாவ் என்னை மரியாதையோடு நடத்தியதோடு, அவருடைய நகைச்சுவை உணர்வு என்னைத் தடுமாறச் செய்தது. அப்போ எனக்கு 32 வயசுதான். ஆனா, மிஷாவ்-க்கு அப்போ 57 வயசு. என்னோட தந்தை போல இருந்தார்.” இப்படி சொல்லிவிட்டு மிஷாவ்வின் கண்களைப் பார்த்து பெட்டி சிமிட்டினார். இருவரின் பார்வையும் நேருக்கு நேர் தழுவவும், 24 ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் கடையில் புத்தகங்களின் காகிதங்களுக்கிடையே உருவாகி வியாபித்த நேசம் இப்போது இந்த அறையில் நிகழ்வதைக் உணர்ந்தேன்.
“கறுப்பின முன்னேற்றம், அதற்கான உள்ளடக்கங்களைக் கொண்ட புத்தகங்கள் பற்றி பேசிப் பேசி எங்கள் சிநேகிதம் ஆழமாச்சு. வயசுதான் அவருக்கு அதிகம். ஆனா தோற்றத்திலும் சிந்தனையிலும் மிக மிக இளமையாக எனக்குத் தெரிந்தார். ஒருவேளை அவருடைய வயதே கணிசமான அனுபவத்தைக் கொடுத்து, அந்த அனுபவங்கள் தந்த பாடங்கள் மூலமாகத் தன்னை இளமையாக உருமாற்றிக் கொண்டார்போல என நினைத்துக் கொண்டேன்.
“ஒரு நாள் கேட்டேவிட்டேன். ஏங்க… எல்லாரும் உங்கள புரஃபஸர்னு கூப்பிடுறாங்களே எங்க முடிச்சீங்க? அதுக்கு அவர் சொன்ன பதில்தான் என்னை அவரிடம் ஒப்படைக்கக் காரணமா இருந்துச்சின்னு சொல்லலாம்…” மீண்டும் மிஷாவ்வைப் பார்த்து சிரிக்கவும், மிஷாவ் நாணுவதைக் கவனித்துவிட்டு சிரித்தேன். அந்தப் பையனும் என்னைப் போலவே மிஷாவ் நாணுவதை கவனித்திருப்பான்போல.

“நான் ஒண்ணும் அவ்வளவுலாம் படிக்கலங்க. ஸ்கூலே கம்ப்ளீட் பண்ணல, அப்டின்னு அவர் சொன்ன நேர்மையான பதில் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அப்படி சொல்ல அவர் வெட்கப்படல. பொய் சொல்லி மிணுக்கவும் அவர் விரும்பல. அந்த நல்ல நட்பு வளர்ந்து எங்களை தம்பதிகளாக்கிடுச்சின்னு சொல்லலாம். மிஷாவ் கல்லூரியில் படித்து பட்டம் பெறலையே தவிர, பட்டம் பெற்றவர்களைவிட அறிவோடுதான் இருந்தாரு. நான் பார்த்த படிச்ச ஆட்களை விட, மிஷாவ் ரொம்ப புத்திசாலியா இருந்தாரு.
புத்தகமும் அனுபவமும்தான் அவரோட படிப்பு. அவர் தன்னோட சொந்தப் பாதையில போனாரு, எந்தப் பிரச்னைக்கும் அவர்ட்ட ஒரு தீர்வு இருந்துச்சு. சுய தீர்மானங்களால, நான் இப்படித்தான் அப்டிங்கிற மாதிரி அவரை அவரே உருவாக்கிக்கிட்டாரு. யாரோட பார்வையும் அவருக்குத் தேவையில்ல, எந்தச் சிந்தனையும் அவர வழிநடத்த முடியாது. இப்படியே மூணு வருஷம் ஓடிடுச்சு. அப்புறம் நாங்க திருமணம் செஞ்சுக்கிட்டோம். எங்களோட மகன்தான் இவன், ஜூனியர் லூயிஸ் மிஷாவ். ஒருத்தரோட லட்சியமா இருந்த தேசிய நினைவு ஆஃப்ரிக்க புத்தகக் கடை, மூணு பேரோட லட்சியமா இப்படித்தான் மாறிடுச்சி…” கல்லூரி மாணவரைப் பார்த்து அறிமுகப்படுத்தவும் நான் வியப்பில் ஆழ்ந்தேன்.
“ஆமாம்… நான் பெட்டியைத் திருமணம் செய்து கொள்வேன் என்று நினைக்கவே இல்லை. அதுவும் அந்த வயதில் ஒரு குழந்தை பெற்றுக் கொள்வது பற்றியெல்லாம் துளியும் எனக்கு சிந்தனை இருந்தது கிடையாது. ஆனால்…” சொல்லிவிட்டு இரண்டு கைகளின் கட்டை விரலையும் உயர்த்திக் காட்டினார்.
“ஹாய் மேம்… ஐ’ம் லூயி…” அந்த இளைஞனின் கைகளைப் பற்றிக் குலுக்கினேன். என்ன அழகான வாழ்க்கை! லட்சியப் பயணத்தில் இணையாத மனைவியை விட்டுப் பிரிந்த லூயிஸ் மிஷாவ், வயிற்றுப் பாட்டுக்கு ஹோட்டல் ஜன்னலைக் கழுவி, மன நிம்மதிக்குத் தெருவில் கை வண்டியில் புத்தகத்தை வைத்துக் கூவிக் கூவி விற்று, காகித வாசனையை மணந்து, புத்தகங்களோடு புத்தகங்களாக சுருண்டு படுத்து உறங்கியெழுந்து கறுப்பின தேசியவாதம் பேசி ஒரு பத்தாண்டு காலம் வாழ்ந்து ஓய்ந்த மனிதனை, மிக மிக இளவயது பூங்காற்று தொட்டுத் தழுவி அரவணைத்து வாழ்வில் புது வசந்தத்தைக் கொண்டு வரும் என்று யார்தான் நினைத்திருப்பர்?

சொந்தமாக கடை வைத்திருந்த கறுப்பினக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அதனை விட்டுவிட்டு சூதாட்டத் தொழிலுக்கு வந்தது முதல், போலீஸில் சிக்கி மீண்டு, அண்ணனின் தயவில் திருமணம் முடித்து, மிகப் பிரபலமான கிறிஸ்தவப் பாதிரியாரின் தம்பி என்ற அந்தஸ்தோடு ஆடம்பரமாக வாழ்க்கையை ஓட்டாமல், அறிவுப் புரட்சி செய்யப் போகிறேன் என மனைவியைப் பிரிந்தது வரை லூயிஸ் மிஷாவின் வாழ்க்கை வெவ்வேறு திசைகளில் பயணித்து, இறுதியில் ஹார்லெம் நகரின் ஏழாவது அவென்யூ 125வது எண்ணைக் கொண்ட புத்தகக் கடையில் வந்து நிலை கொண்டது. அவருக்கு உறுதுணையாக இணைந்தார் பெட்டி லோகன். இந்தத் திருப்பத்தை யாருமே எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லைதானே. வாழ்க்கைதான் எத்தனை விசித்திரமானது, பூரித்துப் போய் தலைசாய்த்து சற்று நேரம் மெளனமாக இருந்தேன்.
“மேம்… மால்கம் X பற்றிக் கேட்டீர்களே? என்னுடைய அனுபவத்தை சொல்லலாமா?”
“தாராளமாக… அதுக்கு முன்பு புத்தகக் கடைக்கும் உனக்குமான தொடர்பு எப்படி? அதைப் பற்றிச் சொல்லலாமே…” சிரித்த முகத்தோடு தந்தையின் அருகில் போய் வாகாக அமர்ந்து கொண்டார் ஜூனியர் லூயிஸ் மிஷாவ்.
“பள்ளிக்கூடம் இல்லாத வார இறுதி நாட்களிலும், கோடை விடுமுறை நாட்களிலும் காலையிலேயே டாடிகூட கடையைத் திறக்கப் போயிடுவேன். கடைக்கு வெளியே வைக்கவேண்டிய புத்தகங்களைப் பற்றிய அறிவிப்பு பலகைகளை வெளியில் கொண்டு வந்து வைப்பேன். கடை ஆரம்பித்த கதையை டாடி டீட்டெய்லா சொல்லிட்டாரு. ஆமாம், பேங்க்ல கடன் கேட்டப்ப, சாப்பாடு கடை வைக்க வேணும்னா கடன் தர்ரேன்னு சொன்னாங்க. ஆனா, டாடி உறுதியா இருந்து, கறுப்பர்களை படிக்க வைத்துக்காட்டுவேன்னு சொன்ன மாதிரியே செஞ்சு காட்டிட்டாரு. ஐந்து புத்தகங்களோடு ஆரம்பித்த எங்க கடையில ஆயிரக் கணக்கான புத்தகங்கள் இருந்துச்சு. தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் எங்க கடைக்கு வந்தாங்க, படிச்சாங்க, பேசுனாங்க, விவாதிச்சாங்க. போராடினாங்க…

“எனக்கும் அப்பாவுக்கும் ஒரே பெயர்தான் என்றாலும் என்னை எல்லோரும் லூயின்னுதான் கூப்பிடுவாங்க. அப்பாவை புரஃபஸர் என்று கூறுவதால், பெயர் குழப்பம் ஏற்பட்டதே இல்லை. நானும் இந்த புரஃபஸர் பத்திக் கேட்டிருக்கேன். கல்லூரி நாட்களின் அனுபவம் எனக்கு கிடைக்கலன்னு சொல்லுவார். புத்தகங்களும் வாழ்வனுபவமும் தனக்கு கற்றுத் தந்ததா சொல்லுவாரு. பள்ளிக்கூடம் போகலன்னா அவன் முட்டாள் கிடையாது அப்டின்னு ஒரு தடவை சொன்னப்ப, அப்ப நானும் ஸ்கூலுக்கு போகமாட்டேன், வீட்டுல இருந்தே புக்ஸ் படிச்சு எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிறேன்னு சொன்னேன்…”
– பக்கங்கள் திறக்கும்

