கல்யாண் ஜுவல்லர்ஸ் மெகா திட்டம்.. இனி ஒவ்வொரு ஊரிலும் நகை கடை! தமிழ்நாடு முதல் டார்கெட்!
இந்திய ரீடைல் நகை கடை சந்தையில் மிகப்பெரிய நிறுவனமாக விளங்கும் கல்யாண் ஜுவல்லர்ஸ் ஏற்கனவே மெட்ரோ நகரங்களில் அதிகப்படியான கடைகளை திறந்தும், ஆன்லைன் வாயிலாகவும் இளம் தலைமுறையினரை ஈர்த்து பெரிய அளவிலான வர்த்தகத்தை பதிவு செய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்தகட்டமாக சிறிய நகரம், டவுன் பகுதிகளில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்திய நகை விற்பனை சந்தையில் 15க்கும் குறைவான பெரிய பிராண்டுகள் மட்டுமே உள்ளது, இதற்கு முக்கிய காரணம் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் பிரபலமான உள்ளூர் ஜுவல்லர்ஸ் பிராண்டுகளும், சிறிய நகை கடைகளும் தான். மக்களுக்கு உள்ளூர் பிராண்டுகள் மீது பெரும் நம்பிக்கை இருக்கும் காரணத்தால் பெரிய பிராண்டாக இருந்தாலும், இப்பகுதியில் புதிய வாடிக்கையாளர்களை பெறுவது கடினம்.

இந்த சவாலை உடைக்க உள்ளூர் நகை டிசைன், மல்டி பிராண்ட் மூலம் 2ஆம், 3ஆம் நிலை நகரங்களில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக உருவாக்கப்பட்டது தான் அட்சய தங்க மாளிகை என்ற புதிய பிராண்ட், இந்த பிராண்ட் கடைகளை முதலில் தமிழ்நாட்டில் திறக்க முடிவு செய்துள்ளது கல்யாண் ஜுவல்லர்ஸ்.
இக்கடைகளில் தமிழ்நாட்டின் பிராம்பரியமான டிசைன்கள் மற்றும் தமிழ்நாட்டில் சிறு நகரங்களில் இருக்கும் மக்கள் விரும்பும் வகையிலான டிசைன்களில் நகைகளை தயாரித்து விற்க திட்டமிட்டு உள்ளது. கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் இப்புதிய வர்த்தக மாடல் பல உள்ளூர் பிராண்டுகளுக்கு பெரிய போட்டியாக அமையும்.
ஏற்கனவே பெரிய பிராண்டுகள் 2ஆம் நிலை நகரங்களுக்கு வந்துள்ள நிலையில், Akshaya Thanga Maligai போன்ற வர்த்தக மாடல் புது போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு பகுதியிலும் கலாச்சாரம் மாறுப்பட்டது என்பதால் ஒரே மாடலில் வர்த்தகம் செய்ய முடியாது என்பதை உணர்ந்த கல்யாண் ஜுவல்லர்ஸ் தனது வருடாந்திர அறிக்கையில் மக்களின் வயது, வாங்க கூடிய சக்தி, லைப்ஸ்டைல், மாநிலத்தின் பாரம்பரியம் அடிப்படையில் வர்த்தகம் செய்ய மாற்று திட்டத்தை தீட்ட உள்ளதாக அறிவித்தது. இதன் அடிப்படையில் தற்போது தமிழ்நாட்டில் Akshaya Thanga Maligai (ATM) திறக்கப்பட உள்ளது.
இந்த வர்த்தக மாடல் வெற்றி அடையும் பட்சத்தில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனி பிராண்ட் என்ற வகையில் கல்யாண் ஜுவல்லர்ஸ் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய வர்த்தகம் முடியும் போது கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்கு விலை 0.22 சதவீதம் உயர்ந்து 596.50 ரூபாயாக உள்ளது. கடந்த 6 மாதத்தில் 48.68 சதவீதம் வளர்ச்சி அடைந்து பெரும் முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தை கொடுத்தள்ளது.

