சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன உயிரிழப்பதற்கு முதல் நாள் இரவு, பல மணி நேரம் தனது சட்ட வழக்கு குறித்து வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்தோடு மறுநாள் காலையில் கபில சந்திரசேன தனது வழக்கறிஞர்கள் மூலம் நீதிமன்றத்தில் சரணடைய இருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கபில சந்திரசேன, நேற்றைய தினம் (08-05-2026) தவறான முடிவெடுத்து உயிரிழந்திருந்தார்.
தவறான முடிவு
கொள்ளுப்பிட்டியிலுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் இல்லத்திலேயே அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் மனைவியின் சகோதரியை கபில சந்திரசேன திருமணம் செய்தவர் என்பதால் கொள்ளுப்பிட்டியில் உள்ள அரவிந்த டி சில்வாவின் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று காலை அவர் தங்கியிருந்த அறை நீண்ட நேரமாகத் திறக்கப்படாததால் குடும்பத்தினர் கதவை உடைத்துப் பார்த்தபோது அவர் பயணப் பை ஒன்றின் பட்டியைப் பயன்படுத்தித் தவறான முடிவெடுத்து உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ச்சியாக விசாரணைகள்
தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் சூழலில், இன்று (09-05-2026) கபில சந்திரசேனவின் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் நியமித்த ஐவர் கொண்ட நீதி மருத்துவ சபையால் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவைக் கோட்டை நீதவான் பாசன் அமரசேன பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

