Cricket
oi-Yogeshwaran Moorthi
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரோகித் சர்மா 84 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இந்த தருணத்தை லார்ட்ஸ் மைதானத்தில் நேரில் நின்று பார்த்த ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா எமோஷனலாகி கண்ணீர்விட்ட வீடியோ ரசிகர்களிடையே நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.
லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடும் போட்டியே ரோகித் சர்மாவின் கடைசி கிரிக்கெட் போட்டியாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகியது. இதனால் ரோகித் சர்மா ரசிகர்கள் மட்டுமல்லாமல் சாதாரண கிரிக்கெட் ரசிகர்களும் கொந்தளித்தனர். ஏனென்றால் உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே இருக்கும் சூழலில், ரோகித் சர்மாவை நீக்குவது சரியா என்ற கேள்விகள் எழுந்தன.

ஆனால் ரோகித் சர்மாவின் மோசமான ஃபார்ம் இந்திய அணிக்கும் பின்னடைவை உருவாக்கியது. இந்த நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் ரோகித் சர்மா பேட்டிங் செய்ய களமிறங்கிய நொடி முதலே ரசிகர்கள் கொஞ்சம் பீதியுடன் அவரின் ஆட்டத்தை பார்த்தனர். தொடக்கத்தில் நிதானம் காட்டிய ரோகித் சர்மா, 7வது ஓவருக்கு பின் அதிரடியை தொடங்கினார்.
சிக்ஸ், பவுண்டரி என்று அடித்தாலும், அவரின் ரன்கள் நிதானமாக உயர்ந்தது. சிறப்பாக ஆடிய அவர் 50 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இதன்பின் கியரை விண்டேஜ் மோடுக்கு மாற்றிய ரோகித் சர்மா, சிக்சரும், பவுண்டரிமாய் விளாச தொடங்கினார். இதனால் 84 பந்துகளில் ரோகித் சர்மா தனது 34வது ஒருநாள் கிரிக்கெட் சதத்தை விளாசினார்.
ரோகித் சர்மாவின் மாபெரும் கம்பேக் சதமாக இது அமைந்துள்ளது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 110 பந்துகளில் 5 சிக்ஸ், 17 பவுண்டரி உட்பட 138 ரன்களை விளாசி ஆட்டமிழந்து வெளியேறினார். அவருக்கு ஒட்டுமொத்த லார்ட்ஸ் மைதானமும் எழுந்து நின்று கை தட்டி மரியாதை செய்தது. இதனிடையே சோசியல் மீடியாவில் ரோகித் சர்மா மனைவி ரித்திகா வீடியோ டிரெண்டாகி இருக்கிறது.
ரோகித் சர்மா சதம் விளாசிய போது எழுந்து நின்று கைகளை தட்டிய ரித்திகா, எமோஷனலாகி கண்ணீர்விட்டு அழுதார். இந்த தருணம் ரோகித் சர்மாவுக்கும் எமோஷனல் மொமண்ட்டாக மாறியது. இதன் மூலமாக ரோகித் சர்மா ஓரம்கட்டப்பட உள்ளதாக வெளியான தகவல், அவரின் குடும்பத்தினரையும் உலுக்கியுள்ளதாக பார்க்கப்படுகிறது.

