Last Updated:
பி.வி.சிந்து ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் யமகுச்சியை அவரது சொந்த மண்ணில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம், ஜப்பான் ஓபனை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றை பி.வி.சிந்து படைத்துள்ளார்.
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் உலக சாம்பியன் யமகுச்சியை வீழ்த்தி, வரலாறு படைத்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
ஜப்பான் ஓபன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்ற பி.வி.சிந்து, டோக்கியோவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், 3 முறை உலக சாம்பியனான ஜப்பான் வீராங்கனை யமகுச்சியை பி.வி.சிந்து எதிர்கொண்டார்.
ஆட்டத்தின் தொடக்கத்தில் சற்று பின்னடைவை சந்தித்தாலும், மீண்டெழுந்த பி.வி.சிந்து 21-க்கு 17, 21-க்கு 17 என்ற கேம்கள் கணக்கில் யமகுச்சியை அவரது சொந்த மண்ணில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம், ஜப்பான் ஓபனை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றை பி.வி.சிந்து படைத்துள்ளார்.
2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குப் பிறகு எந்த தொடரிலும் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்த பி.வி.சிந்து, ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளார். மேலும், 2019-ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பை வென்ற பிறகு, உலகளவில் மிகப்பிரபலமான ஜப்பான் ஓபனில் பி.வி.சிந்து கோப்பை வென்று அசத்தியுள்ளார்.
இதற்கிடையே வரலாறு படைத்துள்ள பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இந்திய பேட்மிண்டனுக்கு இது ஒரு வரலாற்று சாதனை. ஜப்பான் ஓபன் 2026 தொடரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்ற பி.வி. சிந்துவுக்கு வாழ்த்துகள். போட்டி முழுவதும் அவரது உறுதியும், அபாரமான திறமையும் வெளிப்பட்டது. இந்த பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை, இந்த வெற்றியை மேலும் சிறப்பாக்குகிறது. சிந்துவின் இந்த சாதனை, நாடு முழுவதும் உள்ள இளம் வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டில் சாதிக்கவும், தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ஊக்கமளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமரின் இந்தப் பதிவுக்கு நன்றி தெரிவித்துள்ள பிவி சிந்து, “மிகவும் நன்றி, மாண்புமிகு பிரதமர் அவர்களே. உங்கள் வாழ்த்துகள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றன. டோக்கியோ ஒலிம்பிக்கிற்குப் பிறகு உங்களுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்ட அந்த தருணத்தையும், உங்கள் அலுவலகத்தில் நடந்த அந்த சிறிய உரையாடலையும், அதற்கு முன்பும் பின்பும் உங்களை சந்தித்து உங்களிடம் இருந்து ஊக்கம் பெற்ற பல தருணங்களையும் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். அவை அனைத்தும் என் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத இனிய நினைவுகளாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
Jul 19, 2026 10:07 PM IST


