கட்டுமான நிறுவனங்கள் காத்திருக்க வைக்கிறாரங்களா? கவலைப்படாதீங்க! வீட்டை ஒப்படைச்சாலும் இனி இழப்பீடு வாங்கலாம்!
வீடு அல்லது அப்பார்ட்மெண்ட் போன்ற சொத்துக்களை வாங்குவோருக்கு சாதகமான ஒரு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. ஒரு நபர் தனது வீட்டை பணம் செலுத்தி பெற்றுக் கொண்ட பிறகும், வீடு ஒப்படைக்கப்படுவதில் தாமதங்கள் இருந்திருந்தால் சட்டப்படி இழப்பீடு பெற முடியும். அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான வழக்கு உள்ளது. டெல்லியில் ஜனவரி 2003-ஆம் ஆண்டில் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் மூலம் ஒருவர் ஒரு வீட்டை வாங்கினார். ஆனால் அந்த வீட்டை உரிமையாளருக்கு சொன்ன தேதியில் அவர்கள் ஒப்படைக்கவில்லை. வீட்டை கட்டி கொடுக்க தாமதமாகியுள்ளது. இதனால் தனக்கு இழப்பீடு வழங்கக்கோரி அவர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
மாவட்ட நுகர்வோர் நீதிமன்றமும் இந்த வழக்கை பேசித் தீர்த்துக் கொள்ள பரிந்துரைத்தது. அதாவது நீதிமன்றத்துக்கு அப்பால் பொதுவாக ஒரு நபரை வைத்து பேசி தீர்த்துக் கொள்ளுமாறு கூறியது. ஏனெனில் வழக்கு தொடர்ந்தவர் வீடு தாமதமாக கிடைத்ததற்காக நுகர்வோர் நீதிமன்றத்தை நாடிய போது, வீட்டு வசதி சங்கம் தங்கள் தரப்பில் வைத்திருந்த ஒப்பந்தத்தைக் காட்டி இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என மனு தாக்கல் செய்தது.

இதனால் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றமும் 2009-ஆம் ஆண்டில் வழக்கை பேசி தீர்த்துக் கொள்ளும்படி அனுப்பி வைத்தன. அதேபோல 2013 ஆம் ஆண்டில் அதே நபர் மீண்டும் டெல்லி மாநில நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போதும் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் பல ஆண்டுகளாக வழக்கு தொடர்ந்த நபருக்கு நீதி கிடைக்கவில்லை.
அதன் பின் தேசிய நுகர்வோர் குறைத்தீர்ப்பு ஆணையத்தில் 2016-ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்டவர் வழக்கு தொடர்ந்தார். ஆனால் வழக்குத் தொடர்ந்தவர் எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் வீட்டைப் பெற்றுக் கொண்டார். இதனால் அவர் நுகர்வோர் என்ற அந்தஸ்தை இழந்து விட்டார். எனவே சேவை குறைபாட்டைக் காரணம் காட்டி வழக்குத் தொடர முடியாது என்று கூறி வழக்கை முற்றிலுமாக தள்ளுபடி செய்தது.
ஆனால் இந்த உத்தரவையும் எதிர்த்து பாதிக்கப்பட்டவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் மோகனா ஆகியோர் 2016-ஆம் ஆண்டு தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர். பின்னர் ஜூன் 4-ஆம் தேதி.. பாதிக்கப்பட்டவர் வீட்டைப் பெற்றுக் கொண்டார் என்பதற்காக இழப்பீடு பெறாமல் இருக்க முடியாது. அவருக்கு இழப்பீடு பெற அனைத்து உரிமையும் உண்டு. தாமதத்திற்கான இழப்பீடை கட்டாயம் வழங்கியாக வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.
நீண்ட காலமாக கட்டுமான நிறுவனங்களில் லேட் படுத்தி வீட்டை ஒப்படைத்தாலும், எதுவுமே செய்ய முடியாத நிலையில் தான் வீட்டின் உரிமையாளர்கள் இருந்து வந்தனர். ஆனால் இப்போது வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு உண்மையிலேயே பாதிக்கப்படுபவர்களுக்கு நன்மை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

