Last Updated:
இந்திய பங்குச் சந்தை 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த 5 மாதங்களாகத் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 1996 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இப்போதுதான் இதுபோன்ற ஒரு சரிவை சந்தை சந்தித்துள்ளது.
இந்திய பங்குச் சந்தை 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த 5 மாதங்களாகத் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 1996 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இப்போதுதான் இதுபோன்ற ஒரு சரிவை சந்தை சந்தித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு உலகளாவிய பொருளாதார வீழ்ச்சி, கொரோனா பெருந்தொற்று காலத்தில்கூட இவ்வளவு மோசமான சரிவை இந்திய பங்குச்சந்தை சந்தித்ததில்லை. இந்த சரிவுக்குப் பல காரணங்கள் இருந்தாலும், இந்திய அரசாங்கத்தின் ஒரு குறிப்பிட்ட கொள்கை முடிவு வெளிநாட்டு முதலீட்டாளர்களை அதிருப்தி அடையச் செய்து, அவர்கள் பங்குகளை விற்பனை செய்வதற்கு வழிவகுத்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஹீலியோஸ் கேபிட்டலின் நிறுவனர் மற்றும் தலைமை முதலீட்டு அதிகாரியான சமீர் அரோரா, அரசாங்கத்தின் மூலதன ஆதாய வரி விதிப்பு முறையே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடந்த 5 மாதங்களாகத் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்வதற்கு முக்கியக் காரணம் என்று நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். அரசாங்கத்தின் இந்த ”மிகப்பெரிய தவறு” முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பாதித்து, பங்குச் சந்தையில் அதிக அளவிலான விற்பனையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் ஒரு ஊடக நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
இதையும் படிக்க: காப்பீட்டு மோசடிகளை தவிர்க்க பாலிசியின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்க பின்பற்ற வேண்டிய வழிகள்!
வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான பங்குகளை விற்றுள்ளதாக அரோரா கூறினார். உலகளவில் இந்தியாவிலும் முக்கிய முதலீட்டாளர்களாக உள்ள வெளிநாட்டு இறையாண்மை நிதிகள், ஓய்வூதிய நிதிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்கள் (HNI) ஏற்கனவே தங்கள் சொந்த நாடுகளில் வரி விலக்கு பெறாத நிலையில், அந்நிய செலாவணி ஏற்ற இறக்கங்களையும் சந்தித்து வருகின்றனர். இந்தச் சூழலில், அவர்களின் லாபத்தின் மீது மூலதன ஆதாய வரி விதிப்பது முற்றிலும் தவறான அணுகுமுறை என்று அவர் விளக்கினார்.
2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நீண்ட கால மூலதன ஆதாய (LTCG) வரியை 10% லிருந்து 12.5% ஆகவும், குறுகிய கால மூலதன ஆதாய (STCG) வரியை 15% லிருந்து 20% ஆகவும் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. பட்டியலிடப்பட்ட நிதிச் சொத்துக்களை ஒரு வருடத்திற்கும் மேலாகவும், பட்டியலிடப்படாத நிதிச் சொத்துக்களை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகவும் வைத்திருந்தால் அவை நீண்ட கால சொத்துக்களாகக் கருதப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இந்த வரி அதிகரிப்பின் தாக்கம் பங்குச் சந்தையில் ஏற்கனவே தெரியத் தொடங்கியுள்ளது. 2023 ஆம் நிதியாண்டில் இந்தியா சுமார் $10-11 பில்லியன் மூலதன ஆதாய வரியை வசூலித்திருந்தாலும், வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிப்பதன் மூலம் கிடைக்கக்கூடிய நீண்டகால நன்மைகளுடன் ஒப்பிடும்போது, இந்த வருவாய் மிகவும் குறைவு என்று அரோரா சுட்டிக்காட்டினார். சந்தை மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க, இந்தியா மூலதன ஆதாய வரியை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
March 03, 2025 12:24 PM IST
கடும் வீழ்ச்சியை சந்தித்து வரும் இந்திய பங்குச் சந்தை.. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு!


