
மத்திய கிழக்கு போருக்கு முன்பு உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 70 முதல் 80 டொலர் வரை இருந்தது.
உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயை 286 அமெரிக்க டொலர்களுக்கு இலங்கை கொள்வனவு செய்ததாக வெளிவந்த தகவல் உண்மையல்ல என்று இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெளிவுபடுத்தியுள்ளது.
‘மிட்ல் ஈஸ்ட் ஐ’ (Middle East Eye) இணையதளத்தில் வெளியான செய்தியில், HSBC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜோர்ஜ் எல்ஹெட்ரி கூறியதாக ஒரு தகவல் மேற்கோள் காட்டப்பட்டது. அதில், மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் போது விலை 140 முதல் 150 டொலர் வரை இருக்கும் என்றும், இலங்கை ஒரு பீப்பாய்க்கு 286 டொலர் செலுத்தியதாகத் தகவல் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், இந்த தகவல் முழுமையாக தவறானது என அதிகாரப்பூர்வமாக பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மறுத்துள்ளது. மத்திய கிழக்கு போருக்கு முன்பு உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 70 முதல் 80 டொலர் வரை இருந்தது. பின்னர், பிப்ரவரி 28ஆம் தேதி போர் தொடங்கியதையடுத்து விலை 119 டொலர் வரை உயர்ந்தது. தற்போது அது மீண்டும் 100 டொலருக்கு கீழ் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போதைய சூழலிலும் கூட இலங்கை 71 முதல் 113 டொலர் வரையிலான விலையில் மட்டுமே கச்சா எண்ணெயை கொள்வனவு செய்து வருவதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

