ராம் சரண், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘பெத்தி’ திரைப்படம் வரும் 9ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் நடிப்பில் கடந்த 4-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான ‘பெத்தி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரபல இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், திவ்யேந்து மற்றும் ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.விளையாட்டை மையமாகக் கொண்டு பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
ஜான்வி கபூர் தோற்றம் சர்ச்சை
படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஜான்வி கபூரை கவர்ச்சியாக காட்சிப்படுத்தியிருப்பது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த இயக்குநர் புச்சி பாபு சனா, பெண்களை அவமதிக்கும் நோக்கத்தில் எந்தக் காட்சியும் வைக்கப்படவில்லை என விளக்கம் அளித்ததுடன், யாரேனும் மனவருத்தம் அடைந்திருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்தார்.
தென்னிந்தியாவில் நம்பர் 1 வசூல்
இந்நிலையில், வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களின் ஆதரவை பெற்று வரும் இப்படம், இதுவரை உலகளவில் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ராம் சரணின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக ‘பெத்தி’ அமையும் என்ற நம்பிக்கையும் அதிகரித்துள்ளது. 2026-ம் ஆண்டில் இதுவரை வெளியான தென்னிந்திய திரைப்படங்களில் அதிக வசூல் செய்து முதல் இடத்தை பிடித்து ‘பெத்தி’ திரைப்படம் சாதனை படைத்துள்ளது. மேலும் பல வசூல் சாதனைகளை இப்படம் முறியடிக்கும் என்றும் திரையுலக வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஓ.டி.டி.யில் வெளியாகும் “பெத்தி”
இந்த நிலையில், ‘பெத்தி’ திரைப்படம் வரும் ஜூலை 9 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The post ஓ.டி.டி.யில் வெளியாகும் ராம் சரணின் “பெத்தி” திரைப்படம்… எதில், எப்போது பார்க்கலாம்? … appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.
