Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி விளம்பரங்களில் நடிக்க ஒருநாளுக்கு ரூ.2 கோடி வரை ஊதியம் கேட்பதாக தெரிய வந்துள்ளது. விளம்பரங்கள் மட்டுமல்லாமல், தொலைக்காட்சி அல்லது ஓடிடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டுமென்றாலும் அதற்கு பிரத்யேக தொகை ஒன்றை வைபவ் சூர்யவன்ஷி வாங்க தொடங்கிவிட்டதாக தெரிகிறது.
இந்திய அணியின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் வீரராக வலம் வரத் தொடங்கி இருக்கிறார் வைபவ் சூர்வன்ஷி. ஐபிஎல் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி 16 போட்டிகளில் விளையாடி 776 ரன்களை விளாசி தள்ளினார். அதுமட்டுமல்லாமல் 72 சிக்சர்களை விளாசி புதிய சாதனையை படைத்தார். இதனால் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியிலும் இடம்பிடித்தார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமான சூர்யவன்ஷி, அதன்பின் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் தொடர் நாயகன் விருதை கைப்பற்றி சாதனை படைத்தார். இதனால் இந்திய டி20 அணியின் நிரந்தர வீரர்களில் ஒருவராக மாறி இருக்கிறார். கிரிக்கெட் வட்டாரத்தில் மட்டுமல்லாமல் வைபவ் சூர்யவன்ஷி விளம்பர உலகிலும் சூப்பர் ஸ்டாராக உயரத் தொடங்கி இருக்கிறார்.
ஐபிஎல் தொடருக்கு பின் வைபவ் சூர்யவன்ஷியை தங்களின் பிராண்ட் அம்பாஸடராக ஒப்பந்தம் செய்ய பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டு வருகின்றன. ஏற்கனவே சில விளம்பரங்களில் வைபவ் சூர்யவன்ஷி நடித்துவிட்டார். அதில் வைபவ் சூர்யவன்ஷியின் ஊதியம் லட்சங்களில் தான் இருந்தது. ஆனால் இப்போது கோடிகளை எட்டி இருக்கிறது.
அதாவது விளம்பர படங்களில் நடிக்க ஒருநாள் கால்ஷீட் கொடுக்க வேண்டுமென்றால், அந்த நிறுவனம் ரூ.2 கோடி ஊதியம் கொடுக்க வேண்டும் என்று வைபவ் சூர்யவன்ஷி நிபந்தனை விதித்துள்ளார். விளம்பர படங்கள் மட்டுமல்லாமல், தொலைக்காட்சி அல்லது ஓடிடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டுமென்றாலும், வைபவ் சூர்யவன்ஷி ஊதியம் கேட்க தொடங்கி இருக்கிறார்.
15 வயதை மட்டுமே எட்டி இருப்பதால், வைபவ் சூர்யவன்ஷியால் தனிப்பட்ட முறையில் விளம்பர ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியாது. தற்போது அவரின் குடும்பத்தினர் மட்டுமே அதனை கையாண்டு வருகின்றனர். விரைவில் விளம்பர ஒப்பந்தங்களை மேற்கொள்ள ஒரு நிறுவனத்திடம் பொறுப்பை ஒப்படைக்க முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.
தற்போது வைபவ் சூர்யவன்ஷியின் விளம்பர ஒப்பந்தங்களுக்கான வழிகாட்டுதல்களை ராஜஸ்தான் அணி நிர்வாகம் வழங்கி வருகிறது. அந்த அணியின் மேனேஜர், அவருக்கும் சில வழிகாட்டுதல்களை கொடுத்துள்ளார். 15 வயதிலேயே வைபவ் சூர்யவன்ஷி கோடிகளில் ஊதியம் பெறுவதால், அவரின் வளர்ச்சி பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


