
டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் கூட்டுப் பிரகடனத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு சீனா மற்றும் ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளன.
டெல்லி பாரத மண்டபத்தில் தொடங்கிய பிரிக்ஸ் அமைப்பின் இரண்டு நாள் உச்சி மாநாட்டின் முதல் நாளில் வெளியிடப்பட்ட கூட்டுப் பிரகடனத்தில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு ரஷ்யாவும் சீனாவும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்தியாவின் நீண்டகால கோரிக்கையான ஐ.நா. சீர்திருத்தத்தை முன்னெடுப்பதற்கும் பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் ஒருமித்த ஆதரவை வழங்கியுள்ளன.
பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர்களான சீனா மற்றும் ரஷ்யா, சர்வதேச விவகாரங்களிலும் ஐ.நா.விலும் இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் அதிக பங்கு வகிக்க வேண்டும் என்பதையும், நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து பெறுவதற்கான அவற்றின் விருப்பத்தையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.
பாதுகாப்பு சபையை மேலும் ஜனநாயக ரீதியாகவும், பிரதிநிதித்துவம் மற்றும் செயல்திறன் மிக்கதாகவும் மாற்றியமைத்து, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட வளரும் நாடுகளின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், பஹல்காம் தாக்குதலுக்கு மாநாட்டில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், காசாவில் முழுமையான போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் எனவும் தலைவர்கள் வலியுறுத்தினர். அதேவேளையில், ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் குறித்து கூட்டுப் பிரகடனத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

