மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தான், தனது வரலாற்றில் முதன்முறையாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் (UNSC) தற்காலிக உறுப்பு நாடாக (Non-permanent member) அதிரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில், 2027-2028 ஆம் ஆண்டுக்கான தற்காலிக உறுப்பினர் பதவிகளுக்கான ஆசிய-பசிபிக் பிராந்தியக் குழுவின் (Asia-Pacific Group) வெற்றிடத்திற்குப் போட்டியிட்ட கிர்கிஸ்தான், பிலிப்பைன்ஸ் நாட்டைத் தோற்கடித்து இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
கடந்த 1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்திலிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், கிர்கிஸ்தான் ஐநா பாதுகாப்புச் சபைக்குத் தெரிவாவது இதுவே முதல் முறையாகும். மேலும், கடந்த 2017-2018 ஆம் ஆண்டுக் காலத்தில் கசகஸ்தான் பாதுகாப்புச் சபைக்குத் தெரிவானதைத் தொடர்ந்து, ஒரு தசாப்த காலத்திற்குப் பின்னர் இப்பதவிக்குத் தெரிவாகும் இரண்டாவது மத்திய ஆசிய நாடு என்ற பெருமையையும் கிர்கிஸ்தான் பெற்றுள்ளது.
இந்த வெற்றி கிர்கிஸ்தான் நாட்டின் இராஜதந்திரத்திற்கு கிடைத்த ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. நிலப்பரப்பால் சூழப்பட்ட மற்றும் மலைப்பாங்கான நாடுகள் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் அபிவிருத்தி சவால்களுக்கு உலக அரங்கில் அதிக குரல் கொடுக்கும் வகையில், இதுவரை பாதுகாப்புச் சபையில் இடம்பிடிக்காத நாடுகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கிர்கிஸ்தான் அதிபர் சதிர் ஜப்பாரோவ் (Sadyr Japarov) உலகத் தலைவர்களிடம் விடுத்திருந்த கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.
இந்த வாக்கெடுப்புக்கு முன்னதாகப் பேசிய கிர்கிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஜீன்பெக் குலுபேவ் (Jeenbek Kulubaev), ஐநா பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்கள் பட்டியலில் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்து சபையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “கடந்த எட்டு தசாப்தங்களாக சர்வதேச ஒழுங்கின் அடித்தளமாக ஐநா சாசனம் விளங்கிய போதிலும், இன்றைய உலகம் ஆயுத மோதல்கள், சர்வதேச சட்ட மீறல்கள், காலநிலை அபாயங்கள், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பின்மை போன்ற புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது. எந்தவொரு தனி நாடும் இந்த அச்சுறுத்தல்களைத் தனியாக எதிர்கொள்ள முடியாது என்பதால், பல்லரப்பு இராஜதந்திரம் (Multilateral diplomacy) மிகவும் முக்கியமானது” எனக் குறிப்பிட்டார்.
ஐநா பாதுகாப்புச் சபையானது அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய வீட்டோ (Veto) அதிகாரம் கொண்ட 5 நிரந்தர உறுப்பினர்களையும், சுழற்சி முறையில் 2 வருட காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் 10 தற்காலிக உறுப்பினர்களையும் உள்ளடக்கிய 15 நாடுகளைக் கொண்ட அமைப்பாகும். ஐநாவின் மொத்த உறுப்பு நாடுகளில் 25 வீதத்தைக் கொண்டுள்ள ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குப் பாதுகாப்புச் சபையில் நிரந்தர இடங்கள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதன்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆப்பிரிக்கா, ஆசிய-பசிபிக், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியங்களுக்குத் தலா ஒரு இடமும், மேற்கு ஐரோப்பா மற்றும் இதர குழுக்களுக்கு இரண்டு இடங்களுமாக மொத்தம் 5 இடங்கள் நிரப்பப்பட்டன.
இதன்படி புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட,
கிர்கிஸ்தான் (Kyrgyzstan)
ஜிம்பாப்வே (Zimbabwe)
டிரினிடாட் மற்றும் டொபாகோ (Trinidad and Tobago)
போர்த்துகல் (Portugal)
ஆஸ்திரியா (Austria)
ஆகிய 5 நாடுகளும், வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் தற்போது பதவியிலுள்ள பாகிஸ்தான், சோமாலியா, கிரீஸ், டென்மார்க் மற்றும் பனாமா ஆகிய நாடுகளுக்குப் பதிலாகத் தங்களது 2 வருட கால தற்காலிக உறுப்பினர் பதவியை ஏற்கவுள்ளன.

