Last Updated:
திமுக எம்பி ஆ. ராசா, வக்பு சட்ட திருத்த மசோதா மத சுதந்திரத்துக்கும் அரசியல் சாசனத்துக்கும் எதிராக இருப்பதாக மக்களவையில் கேள்வி எழுப்பினார்.
எந்த பரிந்துரை அடிப்படையில் வக்பு சட்ட மசோதாவில் புதிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது என மக்களவையில் திமுக எம்பி ஆ. ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
இஸ்லாமிய மதத்தில் வக்ஃப் என்பதற்கு அந்த மதம் சார்ந்த இறை பணிகளுக்காக நன்கொடையாக கொடுக்கப்படும் சொத்துக்களை குறிப்பிடுவது ஆகும். இது அசையும் சொத்தாகவோ அல்லது அசையா சொத்தாகவோ இருக்கலாம். இது போன்ற வக்ஃப் வாரிய சொத்துக்களை முறைப்படுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்காக வக்ஃப் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, புதிய சட்ட திருத்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்த மசோதா, மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட்து.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக எம்பி ஆ.ராசா, வக்பு சட்டத் திருத்த மசோதா மத சுதந்திரத்துக்கும் அரசியல் சாசனத்துக்கும் எதிராக இருப்பதாக கூறினார். 1970ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரை அடிப்படையில் 1984ஆம் ஆண்டு வக்பு சட்டம் கொண்டுவரப்பட்டதாகவும், அதன் பின் 1995 ஆம் ஆண்டு இஸ்லாமியர்களின் கோரிக்கையின் படி சட்டத்தில் இரண்டு திருத்தம் கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் 2013 ஆம் ஆண்டும் பல பரிந்துரைகள் வழங்கப்பட்டு சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதாகவும் தற்போது எந்தப் பரிந்துரையின் அடிப்படையில் புதிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன எனக் கேள்வி எழுப்பினார். 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தை பின்பற்றினால்தான் நன்கொடை அளிக்க முடியும் என்பது நேர்மையாக நன்கொடை அளிப்பவர்களுக்கு எதிராக உள்ளதாக ஆ. ராசா எம்பி கூறினார். அரசு சொத்துக்கள் என்று முடிவு செய்யும் அதிகாரம் முழுவதும் அரசிடம் இருப்பது ஆபத்தானது என தெரிவித்தார்.
இதனிடையே, 1995ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வக்பு சட்டத்தில் திருத்தம் செய்யும் மத்திய அரசின் சட்ட முன்வடிவினை முழுமையாக திரும்பப் பெற பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை வக்பு வாரியங்களில் சேர்ப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், 5 ஆண்டுகளுக்கு குறைந்து இஸ்லாமை பின்பற்றுபவர்கள் வக்பு வாரியத்திற்கு நன்கொடை அளிப்பதை தடுப்பது, நாட்டின் மத நல்லிணக்க கலாச்சாரத்துக்கு இடையூறாக இருக்கும் என கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
April 02, 2025 7:55 PM IST
எந்த பரிந்துரை அடிப்படையில் வக்பு சட்ட மசோதாவில் புதிய திருத்தங்கள்… மக்களவையில் எம்.பி ஆ.ராசா கேள்வி


