ஊர்லேயே பெரிய தலைக்கட்டு.. 55% சரிந்த டிசிஎஸ், இன்போசிஸ் பங்குகளை வாங்குவது ஏன்.. புரியாத புதிர்!
இந்திய பங்குச்சந்தையில் கடந்த சில மாதங்களில் மோசமான சரிவை சந்தித்த முன்னணி நிறுவனங்களில் மிகவும் முக்கிமானது டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் பங்குகள் தான்.
ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் திறன் காரணமாக முதலீட்டாளர்கள் இந்திய ஐடி துறையினர் மீது நம்பிக்கை இழந்து தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து வந்தனர். இதனால் இந்த 3 ஐடி நிறுவன பங்குகள் தனது உச்ச அளவில் இருந்து சுமார் 50-55 சதவீதம் வரையில் சரிந்து ரீடைல் முதலீட்டாளர்கள் முதல் பெரும் முதலீட்டாளர்கள் வரையில் பீதி அடைய வைத்தது.

இந்த நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரிவால் ஒட்டுமொத்த ஐடி துறையும் வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. ஆயினும் இந்தியாவின் மிகப்பெரிய மியூச்சுவல் பண்ட் திட்டமாக இருக்கும் பராக் பாரிக் பிளெக்சிகேப் பண்ட் இந்த 3 முன்னணி ஐடி சேவை நிறுவனங்களின் பங்குகளை வாங்கி தனது பங்கு இருப்பை ஜூன் மாதத்தில் அதிகரித்துள்ளது, இதை தனது மாதாந்திர போர்ட்போலியோ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சுமார் 1.1 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை கையாளும் பராக் பாரிக் பிளெக்சிகேப் பண்ட் இந்த ஜூன் மாதத்தில் 54 லட்சம் இன்போசிஸ் பங்குகளை வாங்கி அதன் மொத்த இருப்பை 4.27 கோடியாக அதிகரித்துள்ளது, மே மாதத்தில் இதன் அளவு 3.73 கோடியாக இருந்தது.
இதேபோல் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் சுமார் 31.15 லட்சம் பங்குகளை வாங்கி தனது பங்கு இருப்பை 4.61 கோடி பங்குகளாக அதிகரித்துள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தில் 18.26 லட்சம் பங்குகளை வாங்கி மொத்த இருப்பை 1.77 கோடி பங்குகளாக அதிகரித்துள்ளது.
இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு இந்த ஆண்டு அதிகம் நிதி இழப்பை ஏற்படுத்திய பங்குளாக டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் பங்குகள் இருந்து வரும் வேளையில் ஏன் பராக் பாரிக் பிளெக்சிகேப் பண்ட் போன்ற பெரிய மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் இதை வாங்குகிறது..?
இதற்கான விளக்கத்தை பராக் பாரிக் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி மற்றும் டைரெக்டராக இருக்கும் ராஜீவ் தாக்கர் சமீபத்தில் எக்னாமிக் டைம்ஸ் இன்டர்வியூவில் கூறினார். இதில், நாங்க ஏஐ தொழில்நுட்பம் மூலம் இத்துறையை ஆட்டம் காணுவதை தாண்டி நிறுவனத்தின் கேஷ் ஃப்ளோ அடிப்படையில் இந்த முதலீட்டு முடிவுகளை எடுத்துள்ளோம் என தெரிவித்தார்.
இதேபோல் ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஐடி துறையில் எத்தகை தாக்கம் ஏற்படும் என்பது இன்னும் உறுதியாக தெரியாத நிலையில், எங்களுடைய முதலீட்டு முடிவுக்கு நிறுவனத்தின் எதிர்கால கேஷ் ஃப்ளோவை விட இன்றைய கேஷ் ஃப்ளோ முக்கியம் என நம்புகிறோம், மேலும் ஐடி நிறுவனங்கள் பொதுவாக டாலரில் வருமானத்தை ஈட்டி ரூபாயில் செலவு செய்கிறது, இதனால் ஐடி துறை நிறுவனங்களுக்கு பெரும் சுமையாக இருக்கும் சம்பளம் தொடர்பான செலவுகள் இதன் மூலம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.
மேலும் ஏஐ வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி ஐடி நிறுவனங்களின் பணி, வர்த்தகம் மாறப்போவது இல்லை, இந்த இடைப்பட்ட காலத்தில் சில சரிவுகள் வந்தாலும், ஏஐ மூலம் ஆட்டோமேஷன், செயல்திறன் மேம்பாடு மூலம் புதிய வர்த்தகம் கிடைக்கும் வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.
ஆனால் இந்த வேளையில் இந்தியாவின் முன்னணி மியூச்சுவல் பண்ட் நிறுவனமாக இருக்கும் மோதிலால் ஆஸ்வால் ஐடி துறை முதலீடுகள் மீது பெரும் எச்சரிக்கை உடன் உள்ளதாக தெரிவித்துள்ளது, ஏஐ தொழில்நுட்பமம் மூலம் ஐடி நிறுவனங்களின் வருமானம் பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

