Last Updated:
கிரிக்கெட் வாரியம் தடையில்லா சான்றிதழ் அளித்தால் மட்டுமே அவர் உள்ளூர் போட்டிகளை தவிர்த்து விட்டு வெளிநாட்டு போட்டிகளில் விளையாட முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் போட்டிகளில் இனி விளையாட போவதில்லை என்று சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரர் மொயின் அலி அறிவித்துள்ளார். இனி சர்வதேச போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்த போவதாக அவர் கூறியிருக்கிறார்.
இங்கிலாந்தை சேர்ந்த 37 வயதாகும் ஆல்ரவுண்டரான மொயின் அலி 20 ஓவர் போட்டிகளில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். பேட்டிங் மற்றும் பவுலிங்கில் திறமையாக விளையாடுவதால் இவரை அணியில் எடுப்பதற்கு பல்வேறு சர்வதேச டி20 அணி நிர்வாகங்கள் ஆர்வம் காட்டுகின்றன.
2024 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தின் போது மொயின் அலியை சென்னை அணி நிர்வாகம் 8 கோடி ரூபாய் விலைக்கு வாங்கியது. நடப்பு ஐபிஎல் தொடரில் அணியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. ஐபிஎல் போட்டிகளை தவிர்த்து மொயின் அலி பல்வேறு நாடுகளில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
மேலும் இங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் பர்மிங்காம் பீனிக்ஸ் என்ற அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார். 37 வயதாகும் மொயின் அலி தனது கிரிக்கெட் கெரியரின் இறுதி கட்டத்தில் இருக்கிறார். இந்த நிலையில் அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாட மாட்டேன் என்று கூறி ஓய்வை அறிவித்துள்ளார். இனிமேல் சர்வதேச போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்த போவதாக அவர் கூறியிருக்கிறார்.
இருப்பினும் அவருக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடையில்லா சான்றிதழ் அளித்தால் மட்டுமே அவர் உள்ளூர் போட்டிகளை தவிர்த்து விட்டு வெளிநாட்டு போட்டிகளில் விளையாட முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து மொயின் அலி கூறியதாவது, “எனக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீதான ஆர்வம் குறையவில்லை. தொடர்ந்து விளையாடவே விரும்புகிறேன். ஒரு அணியாக செயல்படுவது எனக்கு விருப்பமானதாக இருக்கிறது. கிரிக்கெட்டின் நுணுக்கங்கள் குறித்து தொடர்ந்து சக வீரர்களுடன் பேசி வருகிறேன். அது எனக்கு ஓய்வுக்கு பின்னர் பயிற்சியாளராக செயல்படுவதற்கு உதவும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
February 24, 2025 10:21 PM IST


