கோலாலம்பூர்:
வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் உலு பெர்னாம் அருகே இரு கார்கள் ஒன்றோடொன்று மோதி நடந்த கோர விபத்தில், இரண்டு மாதக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காயமடைந்தனர்.
நேற்று அதிகாலை வேளையில் கோலாலம்பூர் நோக்கிச் செல்லும் பாதையின் கி.மீ 440.5-இல் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
‘டொயோட்டா கேம்ரி’ (Toyota Camry) மற்றும் ‘மாஸ்டா சிஎக்ஸ்-5’ (Mazda CX-5) ஆகிய இரு கார்கள் இந்த விபத்தில் சிக்கின.
இன்று அதிகாலை 2.58 மணியளவில் கிடைத்த அவசர அழைப்பைத் தொடர்ந்து, ரவாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 8 வீரர்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
டொயோட்டா கேம்ரி காரை ஓட்டிச் சென்ற 34 வயது ஆண் ஓட்டுநர் பலத்த காயமடைந்து காருக்குள் சிக்கியிருந்தார். அவரைத் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அந்த காரில் மேலும் இருவர் பயணித்ததாகவும், விபத்து நடந்தவுடன் அவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதெல்லாம் மாஸ்டா காரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பயணித்தனர். அவர்களில் 34 வயதுடைய ஆணும் பெண்ணும் பலத்த காயமடைந்தனர். அவர்களுடன் பயணித்த 8 வயது சிறுமி, 3 வயது சிறுவன் மற்றும் 2 மாத பெண் குழந்தை ஆகிய மூவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன.
கார்களின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அனைவரையும் தீயணைப்பு வீரர்கள் போராடி அதிகாலை 4.20 மணியளவில் பத்திரமாக வெளியே எடுத்தனர். காயமடைந்த அனைவரும் உடனடி மருத்துவச் சிகிச்சைக்காக மருத்துவக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.



