கோலாலம்பூர்:
சர்வதேச அளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளுக்கான ‘உலக அமைதிக் குறியீடு 2026’ (Global Peace Index) பட்டியலில் மலேசியா 12-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
163 நாடுகளை உள்ளடக்கிய இந்த ஆய்வில், கடந்த 2025-ஆம் ஆண்டு 13-வது இடத்தில் இருந்த மலேசியா, தற்போது ஒரு இடம் முன்னேறி இச்சாதனையை நிலைநாட்டியுள்ளது.
இது குறித்து உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் வெளியிட்ட முகநூல் அறிக்கையில், இந்த புதிய மைல்கல் சாதனை மூலம் ஆசிய பிராந்தியத்தில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு இணையாக மலேசியாவும் மிக பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ளதாகக் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ‘மடானி’ (Madani) அரசாங்கம் அளித்து வரும் தொடர் முன்னுரிமைக்குக் கிடைத்த சான்றே இந்த அங்கீகாரம் என்று அவர் கூறினார். “பொது அமைதியையும் நாட்டின் பாதுகாப்பையும் நிலைநாட்டுவதில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் உழைத்த அனைத்து பாதுகாப்புப் படையினர், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மற்றும் அனைத்துத் தரப்பினரின் அர்ப்பணிப்பிற்கு கிடைத்த வெற்றி இது” என்றும் அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் பாராட்டு தெரிவித்தார்.
பொதுமக்களின் நல்வாழ்வு, முதலீட்டாளர்களின் நம்பிக்கை மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆகிய அனைத்திற்கும் பாதுகாப்பே அடித்தளம் என்று சுட்டிக்காட்டிய அவர், எல்லைக் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்துதல், குற்றச் செயல்களை ஒடுக்குதல் போன்றவற்றின் வழி மலேசியாவைத் தொடர்ந்து பாதுகாப்பான நாடாக வைத்திருக்க உள்துறை அமைச்சகம் தொடர்ந்து பாடுபடும் என உறுதியளித்தார்.இவ்வரிசையில் ஆசிய பிராந்தியத்தில் சிங்கப்பூர் 8-வது இடத்தையும், ஜப்பான் 10-வது இடத்தையும், மலேசியா 12-வது இடத்தையும் பிடித்து முன்னிலை வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.



