உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் 2ஆவது CEO.. சுந்தர் பிச்சை இல்லை ஆனால் இவர் ஒரு இந்தியர்..!!
அமெரிக்காவின் பல்வேறு டெக் நிறுவனங்களிலும் இந்தியர்கள் தான் தலைமை பொறுப்பு வகிக்கின்றனர். சுந்தர் பிச்சை, சத்ய நாதெல்லா என இந்திய பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. பெரிய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவி என்றால் பெரிய பொறுப்பு மட்டுமல்ல பெரிய சம்பளமும் தேடி வரும்.
உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நம்பர் ஒன் தலைமை செயல் அதிகாரி என்றால் அது எலான் மஸ்க் தான். இரண்டாவது இடத்தில் யார் இருக்கிறார்கள் என்றால் நாம் சுந்தர் பிச்சை பெயரை தான் கூறுவோம். ஆனால் யாரும் பெரிதாக அறிந்திராத ஒருவர், உலகிலேயே அதிக ஊதியம் பெறும் இரண்டாவது சிஇஓ-வாக திகழ்கிறார். அவர் இந்தியாவை சேர்ந்தவர் என்பது மற்றொரு சிறப்பு.

வெல்டவர் (Welltower) என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் ஷங்க் மித்ரா. இவர் தான் உலகிலேயே அதிக ஊதியம் பெறும் இரண்டாவது சிஇஓ. கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் இன்ஸ்ட்ருமென்டேஷன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் பயின்ற இவர், பின்னர் அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ பட்டம் பெற்றார். இவர் அப்ளைடு வேல்யூ இன்வெஸ்டிங் பிரிவில் நிபுணத்துவம் பெற்றவர்.
அமெரிக்காவில் பிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ் (Fidelity Investments), சிட்டாடல் (Citadel) மற்றும் மில்லினியம் மேனேஜ்மென்ட் (Millennium Management) போன்ற முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 2016ஆம் ஆண்டில் வெல்டவர் நிறுவனத்தில் இணைந்த ஷங்க் மித்ரா, வெறும் இரண்டே ஆண்டுகளில் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரியாக உயர்ந்தார்.
2020இல், கோவிட் பெருந்தொற்று உச்சத்தில் இருந்த சவாலான காலகட்டத்தில், இவர் வெல்டவர் நிறுவனத்தின் சிஇஓ-ஆக பொறுப்பேற்றார். பெரும்பாலானவர்கள் அடுத்த காலாண்டு லாபத்தை மட்டும் நோக்கமாக கொண்டு செயல்பட்டபோது, ஷங்க் மித்ரா அடுத்த 10 ஆண்டுகால வளர்ச்சி என திட்டமிட்டு செயல்பட்டார். தரவுகளின் அடிப்படையில் முதலீட்டு முடிவுகளை எடுப்பர். இந்த அணுகுமுறையே, வெல்டவர் நிறுவனத்தை உலகின் மிகப்பெரிய ஒரு ஹெல்த்கேர் ரியல் எஸ்டேட் நிறுவனமாக மாற்றியது.
இதனால் இவரது சம்பளமும் உயர்ந்தது. 2025ஆம் ஆண்டு நிலவரப்படி ஷங்க் மித்ரா உலகின் இரண்டாவது அதிக ஊதியம் பெறும் சிஇஓ-வாக உருவெடுத்தார். இவர் சுமார் 8,000 கோடி ரூபாய் அதாவது 1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஊதியத்தை பெறுகிறார். இந்த தொகை முழுவதும் வெறும் சம்பளம் மட்டுமல்ல நிறுவனத்தின் பங்குகள் மற்றும் பிற அலோவென்ஸுகளும் சேர்ந்தது.
எனவே ஒரு துறையில் நிபுணத்துவம் பெற வேண்டும், நீண்ட கால இலக்கை வைத்து செயல்பட வேண்டும். இது இருந்தால் நிச்சயம் வாழ்க்கையில் யாரும் எட்ட முடியாத உயரத்தை அடைய முடியும், குறுகிய கால ஏற்றங்களை விட நீண்ட கால இலக்குகளே சிறந்தது என்பதையே இவரது வாழ்க்கை நமக்கு உணர்த்தும் பாடம்.
