Last Updated:
இந்தியா உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக ஜப்பானை பின்னுக்குத் தள்ளியுள்ளது. நிதி ஆயோக் தலைமை சுப்ரமணியம் இதை உறுதிப்படுத்தியுள்ளார். 3வது இடத்தை இரண்டரை ஆண்டுகளில் அடையலாம் எனவும் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் 4ஆவது பெரிய பொருளாதாரம் என்ற இடத்தை இந்தியா பெற்றுள்ளதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக்கின் 10ஆவது நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சூழல் இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதாகத் தெரிவித்தார். பொருளாதார ரீதியாக இந்தியா வளர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில், “நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உலகிலேயே 4வது பெரிய பொருளாதாரம் என்ற இடத்தில் நாம் இருக்கிறோம். இப்போது நாம் 4 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இருக்கிறோம். இந்த தரவுகளை ஐஎம்எஃப் வழங்கி உள்ளது. இன்றைய நிலவரப்படி ஜப்பானை விட இந்தியா பெரிய பொருளாதாரம். நமக்கு முன் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகள் மட்டுமே உள்ளன. தற்போதைய திட்டங்களை நாம் பின்பற்றி செயல்படுத்தினால் 3வது இடத்தை இரண்டரை ஆண்டுகளில் பிடித்துவிடுவோம்” என்று தெரிவித்தார்.
மேலும், தற்போது இந்தியா டேக்ஆஃப் கட்டத்தில் இருப்பதால், வளர்ச்சி மிகவும் வேகமாக இருக்கும் என்றும் அவர் கூறினார். சேவை வழங்குவதில் உள்ள பல சிக்கல்களை இந்தியா சரி செய்துள்ளதாக தெரிவித்த சுப்ரமணியம், நாட்டில் கடுமையான வறுமையை 5 சதவீதத்திற்கு கீழ் இந்தியா குறைத்துள்ளதாக கூறினார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


