International
oi-Shyamsundar I
இஸ்லாமாபாத்: அமெரிக்காவின் நேட்டோ அமைப்பை போலவே புதிதாக இஸ்லாமிய நேட்டோ என்ற ஒரு அமைப்பு உருவாகி உள்ளது.
நீண்ட மாதங்களாக நடைபெற்ற உயர்நிலை கூட்டங்கள், செய்தியாளர் சந்திப்புகள், அரசியல் ரீதியான ஆலோசனைகள் மற்றும் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் மெக்காவில் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட்டுள்ளன.

சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மான், துருக்கி அதிபர் ரசெப் தாயிப் எர்டோகன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஆகியோர் இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவில் வெள்ளிக்கிழமை இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஊடகங்களும் உலக அரசியல் வல்லுநர்களும் இந்த ஒப்பந்தத்தை இஸ்லாமிய நேட்டோ என்று வர்ணித்து வருகின்றனர்.
ஒருவர் மீது தாக்குதல் நடத்தினால் அனைவர் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்
இந்தக் கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மிக முக்கியமான அம்சம் அதன் பரஸ்பர பாதுகாப்பு விதியாகும். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது வெளியில் இருந்து ஆயுதமேந்திய தாக்குதல் நடத்தப்பட்டால், அது மற்ற இரு நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகவே கருதப்படும்.
இது குறித்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், “எந்தவொரு வெளிநாட்டு தாக்குதலுக்கும் எதிரான பதில் தாக்குதலை, பாதுகாப்பை வலுப்படுத்துவதையும், மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது ஆயுதமேந்திய தாக்குதல் நடத்தப்பட்டால் அதை அனைத்து நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதுவதையும் இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், மூன்று நாடுகளுக்கு இடையே ராணுவ ஒத்துழைப்பை அனைத்துக் கோணங்களிலும் மேம்படுத்த இது வழிவகுக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தின் பின்னணியும் அவசியமும்
மத்திய கிழக்கில் ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் சூழ்நிலையிலேயே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதில் சவுதி அரேபியா மிகக் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. ஏற்கனவே நேட்டோ அமைப்பில் உறுப்பினராகவும், அந்த அமைப்பில் இரண்டாவது மிகப்பெரிய ராணுவத்தைக் கொண்டும் விளங்கும் துருக்கி, இந்தப் புதிய ஒப்பந்தம் நேட்டோவுடனான தங்களின் சர்வதேச ஒப்பந்தத்திற்கு எந்தவிதத்திலும் முரணானது அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தக் கூட்டணியின் ராணுவ மற்றும் பொருளாதார பலம்
தனித்தனியாகப் பார்த்தால், இந்த மூன்று நாடுகளின் கூட்டணியானது உலக அரசியல் வரைபடத்தில் மிகப்பெரிய அதிகார மையமாக உருவெடுக்கக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது:
சவுதி அரேபியா: உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதி நாடாகவும் பொருளாதாரப் புலியாகவும் விளங்கும் சவுதி அரேபியா, நவீன ராணுவ ஆராய்ச்சி மற்றும் தளவாடத் தயாரிப்புகளுக்குத் தேவையான பிரம்மாண்டமான நிதியை வழங்க முடியும்.
துருக்கி: நேட்டோ அமைப்பின் அதிநவீன தொழில்நுட்பத் தொடர்புகளைக் கொண்ட துருக்கி, சொந்தமாக ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்வதில் சிறந்து விளங்குகிறது. குறிப்பாக ட்ரோன் தயாரிப்பில் சர்வதேச அளவில் முன்னணி ஏற்றுமதியாளராகத் திகழ்கிறது.
பாகிஸ்தான்: இஸ்லாமிய நாடுகளில் அணுஆயுத வல்லமை பெற்ற ஒரே நாடான பாகிஸ்தான், களத்தில் போரிட்ட அனுபவம் மிக்க மிகப்பெரிய ராணுவப் படையைக் கொண்டுள்ளது.
மேலும், இந்த மூன்று நாடுகளும் சர்வதேச கடல்சார் வர்த்தகப் பாதைகள் மற்றும் முக்கிய துறைமுகங்களைக் கட்டுப்படுத்தும் வல்லமையை கொண்டு உள்ளன.
வரலாற்று ரீதியாக சவுதி அரேபியாவிற்கும் துருக்கிக்கிற்கும் இடையே தீவிரமான அரசியல் போட்டி நிலவி வந்தது. முஸ்லிம் பிரதர்ஹுட் அமைப்பிற்கு துருக்கி அளித்த ஆதரவு, 2014-ல் சவுதி அந்த அமைப்பிற்கு விதித்த தடை, சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி இஸ்தான்புல்லில் படுகொலை செய்யப்பட்டது மற்றும் ஓ.ஐ.சி அமைப்பிற்கு மாற்றாகப் புதிய தளத்தை உருவாக்க துருக்கி முயற்சித்தது போன்றவை இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை வெகுவாகப் பாதித்திருந்தன.
ஆனால், 2025 செப்டம்பரில் சவுதியும் துருக்கியும் நட்பு நாடுகளாக மாறின. இரண்டு நாடுகளும் பல்வேறு ஒப்பந்தங்களை செய்தன. அதன் தொடர்ச்சியாகவே இப்போது இந்த டீலிங் முடிந்துள்ளது.

