Tamilnadu
oi-Shyamsundar I
சென்னை: தமிழகச் சட்டமன்றத்தின் மிக முக்கியமான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கும் நிலையில், தலைமைச் செயலகத்தில் வழக்கத்தை விடவும் கூடுதல் பரபரப்பும் அரசியல் சூடும் தொற்றிக் கொண்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை நேற்று காவல்துறை திடீரெனக் கைது செய்ததும், மாலையிலேயே அவர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்படாமல் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டதும் தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில், இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியான தவெகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சியான திமுக தயாராகி வருகிறது.

உதயநிதியைத் தடுக்கத் திட்டமா?
நேற்று காலை உதயநிதி ஸ்டாலின் நீலாங்கரையில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் ஒரு மிகப்பெரிய அரசியல் வியூகம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இன்று தொடங்கவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி பங்கேற்பதைத் தடுத்து, அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைப்பதே ஆளுங்கட்சியின் முதன்மைத் திட்டமாக இருந்தது எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற அவசர விசாரணையின் போது, உதயநிதியைச் சிறையில் அடைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என அரசு தரப்புத் பின்வாங்கியதால், மாலையிலேயே அவர் விடுவிக்கப்பட்டார். இதன் மூலம், தவெக அரசு போட்ட கணக்கு தலைகீழாக மாறியது.
இரவோடு இரவாகத் தவெக அவசர ஆலோசனை
கைது நடவடிக்கைக்குப் பிறகு காவல் நிலைய ஜாமீனில் வெளியே வந்த உதயநிதி ஸ்டாலின், இன்று சட்டமன்றக் கூட்டத்தொடரில் நேரில் பங்கேற்கவுள்ளார். கைதைத் தொடர்ந்து திமுக தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சியும், ஆளுங்கட்சி மீது எழுந்துள்ள விமர்சனங்களும் சட்டமன்றத்தில் எதிரொலிக்கும் என்பதை உணர்ந்த முதலமைச்சர் விஜய், நேற்று இரவோடு இரவாகத் தனது முக்கிய அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில்,
திமுகவின் தாக்குதலை எதிர்கொள்ளும் வழிமுறைகள் விவாதிக்கப்பட்டது. கைது விவகாரம் மற்றும் காவிரி நீர் பிரச்சனை குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று அவையில் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளதால், அதற்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது?
திமுக எழுப்பும் அரசியல் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்கும் அதே வேளையில், பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் புதிய திட்டங்கள் மீது மக்களின் கவனத்தை எவ்வாறு திருப்புவது?
அவையில் ஏற்படும் அமளியை எதிர்கொள்ளவும், எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் எவ்வாறு பாயிண்ட்-டு-பாயிண்ட் பதிலளிக்க வேண்டும் என்றும் விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அவையில் வெடிக்கக் காத்திருக்கும் புயல்
கைது செய்யப்பட்டு கம்பீரமாக வெளியே வந்துள்ள உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று அவைக்குள் நுழையும் போது, அவை நடவடிக்கைகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுங்கட்சியின் பழிவாங்கும் நடவடிக்கை, சட்டம் ஒழுங்கு பிரச்சனை மற்றும் காவிரி விவகாரம் குறித்து திமுக புயலைக் கிளப்பக் காத்திருக்கிறது.
உதயநிதியைச் சிறையில் அடைத்துச் சட்டமன்றத்திற்குள் வரவிடாமல் தடுக்க நினைத்த தவெக அரசின் திட்டம் தோல்வியடைந்த நிலையில், இன்று சட்டமன்றத்தில் திமுகவின் தாக்குதலை விஜய் அரசு எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பதே தமிழக அரசியலின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

