ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, பிராந்திய அளவிலான போர் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதாக ஈரானின் உச்ச கூட்டு ராணுவ கட்டளைமையமான கதம் அல்-அன்பியா எச்சரித்துள்ளது.
குறித்த மையத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் சோல்ஃபகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு பதிலடி
அமெரிக்காவின் தொடர்ச்சியான தூண்டுதல்களையும், பிராந்தியத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளையும் கடுமையாகக் கண்டித்துள்ள அவர், “அப்பகுதியில் உள்ள சில நாடுகளின் ஒத்துழைப்பும் போர் மற்ற இடங்களுக்கும் பரவும் அபாயத்தை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அமெரிக்காவினால் வர்த்தகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் விநியோகக் கப்பல்களின் போக்குவரத்திற்கு ஏற்படும் எந்தவொரு இடையூறு அல்லது அச்சுறுத்தலுக்கும் ஈரானிய ராணுவம் தீர்க்கமான பதிலடி கொடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதனை ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) சமீபத்திய நாட்களில் நிரூபித்துக் காட்டியுள்ளதாகவும் சோல்ஃபகாரி வலியுறுத்தியுள்ளார்.
போரின் தீப்பிழம்புகள்
மேலும், அமெரிக்காவுடன் எந்தவொரு ஒத்துழைப்பை மேற்கொள்வதும் அல்லது அதன் ராணுவத்திற்கு தளவாட ஆதரவை வழங்குவதும் ஈரானின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு எதிரான போராகக் கருதப்படும் என பிராந்திய நாடுகளின் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த மோதல் மேலும் விரிவடைந்தால், போரின் தீப்பிழம்புகள் ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் சூழ்ந்துகொள்ளும் என அவர் தொடர்ந்தும் எச்சரித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

