India
oi-Nantha Kumar R
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இருந்து நேபாளத்துக்கு 32 பேர் கைலாய பயணம் மேற்கொண்டனர். இதில், கடைசி நேரத்தில் சீனா சார்பில் விசா மறுக்கப்பட்டதால் மேற்குவங்க பெண் ஒருவர் நேபாள பயணத்தை ரத்து செய்துவிட்டு லடாக்கிற்கு சென்றதால் தப்பினார்.
நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 288 இந்தியர்கள் வெள்ளத்தில் சிக்கி மாயமாகி உள்ளனர். தமிழகத்தில் இருந்து சென்ற இரண்டு குழுவினர் இதில் அடங்குவர். ஒரு குழுவில் 37 பேர், 2வது குழுவில் 49 பேர் இருந்தனர். தற்போது வரை தமிழகத்தை சேர்ந்த 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர மேற்கு வங்க குழுவை சேர்ந்த 32 பேர் மாயமாகி உள்ளனர். இவர்கள் கைலாயத்துக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டவர்கள். இந்நிலையில் தான் விசா மறுப்பால் மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் தப்பி உள்ளார். அதாவது மேற்கு வங்கத்தில் இருந்து 33 பேர் கைலாய ஆன்மிக பயணத்திற்காக நேபாளம் மற்றும் சீனாவிற்கு செல்ல முடிவு செய்தனர்.
இதில் தாபதி சிங்கா (வயது 31) என்ற பெண்ணும் அடங்குவர். இவர் உள்பட 33 பேர் தான் மேற்கு வங்கத்தில் இருந்து கைலாய பயணத்துக்கு தயாரானார்கள். ஆனால் அவருக்கு சீனா செல்வதற்கான விசா கிடைக்கவில்லை. இதனால் அவர் தனது பயணத்தை லடாக்கிற்கு மாற்றினார். நேபாளம், சீனாவிற்கு செல்லாமல் லடாக் சென்றார். இதனால் மேற்கு வங்க குழுவில் உள்ள 32 பேர் மட்டும் நேபாளம் – சீனா நோக்கி புறப்பட்டனர்.
தற்போது இந்த 32 பேரும் பெரும் வெள்ளத்தில் சிக்கி மாயமாகி உள்ளனர். அவர்களின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஒருவேளை தாபதி சிங்காவும் இந்த குழுவுடன் நேபாளம் பயணித்து இருந்தால் அவரும் மாயமாகி இருக்கலாம். ஆனால் சீனாவின் விசா கிடைக்காததால் அவர் அங்கு செல்லாத நிலையில் தப்பித்துவிட்டார்.
இதுபற்றி தாபதி சிங்கா கூறுகையில், ”நான் தற்போது டெல்லியில் உள்ளேன். இன்று மாலைக்குள் கொல்கத்தா செல்வேன். நான் கைலாய யாத்திரை செல்ல முடிவு செய்தேன். கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் டிராவல் ஏஜென்சி வழியாக 13 நாள் சுற்றுப்பயணத்திற்கு ரெடியானேன். மே மாதம் முதல் சுற்றுப்பயணத்துக்கான தயாரிப்பு மீட்டிங், ஷாப்பிங் டிரிப்ஸ், டிரக்கிங் சம்பந்தமான பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றேன்.
பயணத்துக்கு சில நாட்களுக்கு முன்பு எனது விசா விண்ணப்பம் திடீரென்று ரத்து செய்யப்பட்டது. இதனால் லடாக்கை நோக்கி எனது பயணத்தை மாற்றினேன். விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டபோது நான் மனம் வருந்தினேன். இப்போது அது வேறுவிதமாக என் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது” என்றார்.


