முன்னாள் அரச புலனாய்வுத் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றபோது, தனது மடிக்கணினிகள் மற்றும் கைபேசிகள் உள்ளிட்ட அனைத்து உத்தியோகபூர்வ உடைமைகளையும் இராணுவத் தளபதியிடம் முறையாக ஒப்படைத்துள்ளார் என்று அவரது வழக்கறிஞர் சஞ்சீவ வீரவிக்ரம தெரிவித்தார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ் சலே இராணுவத்திலிருந்து விலகியபோது, தனது சீருடை, குறிப்பேடுகள், உத்தியோகபூர்வ அறிக்கைகள், பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகள், வாகனங்கள் மற்றும் அனைத்து டிஜிட்டல் சாதனங்களையும் இராணுவத் தளபதியிடம் ஒப்படைத்தார் என்று வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
புலனாய்வுத்துறை செய்யவேண்டியது
இது குறித்து குற்றப் புலனாய்வுத் துறை தகவல் அறிய விரும்பினால், அது இராணுவத் தளபதியை வரவழைத்து, பொருட்கள் முறையாக ஒப்படைக்கப்பட்டுள்ளனவா என்று விசாரிக்கலாம்.

தற்போது நடைபெற்று வரும் எந்தவொரு விசாரணைக்கும் தொடர்புடைய எந்த உபகரணமும் சுரேஷ் சலேவிடம் இல்லை என்பதை அவர் உறுதிப்படுத்துகிறார்.
சலேவிடம் தற்போது ஒரு HP மடிக்கணினியும், 2024-ல் வாங்கப்பட்ட ஒரு ஐபோன் 12 கைபேசியும் மட்டுமே உள்ளன என்றும், அவை இந்த விசாரணைகளுக்குத் தொடர்புடைய காலத்திற்குப் பிறகு வாங்கப்பட்டவை என்றும் வழக்கறிஞர் தெரிவித்தார்.
மேலும், அந்தச் சாதனங்களில் சலேவுக்கும் அவரது மனைவிக்கும் இடையேயான தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் அவரது மகளின் புகைப்படங்கள் போன்ற தனிப்பட்ட தரவுகள் உள்ளன என்றும் அவர் கூறினார்.
தனிப்பட்ட தகவல்களை பெற அதிகாரம் இல்லை
இந்தத் தனிப்பட்ட சாதனங்களின் கடவுச்சொற்களை வழங்காத முடிவு, தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்பு உரிமையின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது என்று வழக்கறிஞர் குறிப்பிடுகிறார்.

ஒரு தனிநபரின் எந்தவொரு குற்றச் செயலிலும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்தாமல், அவரது தனிப்பட்ட தரவுகளையும் குடும்பத் தகவல்களையும் பெறுவதற்கு குற்றப் புலனாய்வுத் துறைக்கு சட்டபூர்வ உரிமை இல்லை என்றும், அத்தகைய தரவுகளைப் பெறுவதற்கு,நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டு முறையான அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடவுச்சொற்கள் இல்லாமலேயே விசாரணைகளை நடத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட நிறுவனங்கள் இருந்தாலும், தங்கள் கட்சிக்காரர்களின் தனியுரிமையைப் பாதிக்கும் எந்தவொரு தகவலையும் குற்றப் புலனாய்வுத் துறைக்கு வழங்க மாட்டோம் என்று சட்டத்தரணி சஞ்சீவ வீரவிக்ரம வலியுறுத்தினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

