International
oi-Nantha Kumar R
இஸ்லாமாபாத்: ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் 14 ஆண்டு சிறை தண்டனையில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் இம்ரான் கான் சிறையிலேயே இறந்து இருக்க வாய்ப்புள்ளது என்று 3 ராணுவ அதிகாரிகள் கூறியதாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் 20 லட்சம் பேர் தெருவில் இறங்கி போராட்டத்துக்கு தயாராக உள்ளதாக பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான். சிறந்த ஆல்ரவுண்டரான இவர் தலைமையில் தான் பாகிஸ்தான் 1992ம் ஆண்டு உலககோப்பையை வென்றது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இம்ரான் கான் ‘பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப்’ (Pakistan Tehreek-e-Insaf)என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். இந்த கட்சியை சுருக்கமாக பிடிஐ (PTI) என்பார்கள்
அரசியல் கட்சியை தொடங்கியது மட்டுமின்றி இம்ரான் கான் பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக உயர்ந்தார். கடந்த 2018 ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக செயல்பட்டார். அதன்பிறகு அவரது ஆட்சி கவிழ்ந்தது. இம்ரான் கான் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
குறிப்பாக இம்ரான் கானும் அவரது மனைவி புஷ்ரா பீபியும் இணைந்து, ‘அல் குவாதிர் டிரஸ்ட்’ தொடங்கி கோடிக்கணக்கில் ஊழல் செய்ததாகவும், இதனால் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு 14 ஆண்டு சிறை தண்டனையும், மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.
இம்ரான் கான் தற்போது ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் உள்ளார். சிறையில் அவர் சித்ரவதை செய்யப்படுவதாகவும், அவரை கொல்ல முயற்சி நடப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில் தான் சிறையில் இம்ரான் கான் இறந்திருக்க வாய்ப்புள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளன. இதுபற்றி பாகிஸ்தான் பத்திரிகையாளர் வஜாஹத் சயீத் கான் பரப்பான தகவலை தெரிவித்துள்ளார்.
இதுபற்றி வஜாஹத் சயீத் கான், ”இம்ரான் கான் சிறையிலேயே இறந்து இருக்கலாம் என்று 3 ராணுவ அதிகாரிகள் என்னிடம் கூறியுள்ளனர். ஆனால் இன்னும் அது உறுதி செய்யப்படவில்லை” என்று கூறியுள்ளார். இம்ரான் கான் சிறையிலேயே இறந்துவிட்டார். அவரது உடல்நலம் மோசமாகி உள்ளது என்று தொடர்ந்து வதந்திகள் பரவி வருகின்றன. இப்படியான சூழலில் வஜாஹத் சயீத் கானின் இந்த கருத்து இம்ரான் கான் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளதுது.
ஏனென்றால் இந்த தகவலை கூறியுள்ள பத்திரிகையாளர் வஜாஹத் சயீத் கான் சாதாரணமானவர் இல்லை. தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். அங்கு புகழ்பெற்ற அமெரிக்காவில் டெலிவிஷனில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு ‘எம்மி’ விருது வழங்கப்படும். இந்த விருதுக்கு வஜாஹத் சயீத் கான் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கருத்தை அவர் கூறியுள்ளார். இதனால் பலரும் இம்ரான் கான் பற்றிய கவலையை எழுப்பி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி சில நாட்களாக இம்ரான் கானை பார்க்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இம்ரான் கானை பார்க்க சென்ற அவரது குடும்பம் மற்றும் அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ – இன்சாஃப் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதுவும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ – இன்சாஃப் கட்சி கொதித்து போய் உள்ளது. அந்த நாட்டின் கைபர் பக்துன்வாவின் முதல்வர் சோஹைல் அப்ரிடி கூறுகையில், ”இம்ரான் கானுக்கு ஏதாவது நடந்திருந்தால் 20 லட்சம் பேர் தெருவில் இறங்கி போராட்டம் நடத்த தயாராக உள்ளனர். பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீரின் செயல்பாட்டால் எங்களின் கோபமான இளைஞர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். உடனடியாக இம்ரான் கான் நலமாக உள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டு, அவரை சந்திக்க குடும்பத்தினருக்கு அனுமதி வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

