Last Updated:
தொகுதி மறுவரையறை மசோதா’ தோற்கடிக்கப்பட்ட பரபரப்பான சூழலில், பிரதமரின் இந்த உரை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது
பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார்.நேற்று மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்ட சூழலில், பிரதமரின் இந்த உரை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
மக்களவை இடங்களை 850 ஆக உயர்த்தும் அரசியலமைப்புத் திருத்த மசோதா நேற்று மக்களவையில் தோற்கடிக்கப்பட்டது. தென்மாநிலங்களின் இடங்கள் குறையாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்திருந்தார். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மசோதாவிற்கு எதிராக வாக்களித்தன. இதனால் 2/3 பெரும்பான்மை கிடைக்காமல் மசோதா தோல்வியடைந்தது.
பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டுமெனில் தொகுதி மறுவரையறை அவசியமாகும். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் இந்தத் திட்டம் முடங்கியுள்ள நிலையில், இது குறித்து பிரதமர் தனது உரையில் விளக்கமளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, சூழலுக்கு ஏற்ப மூன்று வெவ்வேறு தளங்களில் தனது கருத்துகளைப் பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
தனது மனதின் குரல் வானொலி உரையாடல் நிகழ்ச்சியின் மூலம், மக்கள் நலன், அரசின் நிர்வாகச் செயல்பாடுகள் குறித்துப் பேசுகிறார். இது பெரும்பாலும் அரசியல் கலப்பு இல்லாத, நாட்டின் சாதனைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் வெற்றிக் கதைகளைப் பகிரும் ஒரு சமூகத் தளமாகச் செயல்படுகிறது.
மக்களவை உறுப்பினர் மற்றும் நாட்டின் பிரதமர் என்ற முறையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் மக்களவையில் பதிலளிக்கிறார்.
மூன்றாவாதாக மக்களிடையே நேரடியாக உரை நிகழ்த்துகிறார். நாட்டின் நீண்டகால அரசியல் மற்றும் நிர்வாக நடைமுறைகளில் நிலவி வரும் ‘Status Quo’ எனப்படும் தற்போதைய நிலையை அடியோடு மாற்றும் (Disruptive) தருணங்களின் போது மட்டுமே பிரதமர் இத்தகைய நேரடி உரைகளை நிகழ்த்துகிறார். பணமதிப்பிழப்பு (2016), கொரோனா பேரிடர் ஊரடங்கு (2020), ஜிஎஸ்டி அமலாக்கம், வேளாண் சட்டங்கள் ரத்து போன்ற நிகழ்வுகள் போது நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்க்கட்சிகள் தடுத்துவிட்டன என்ற குற்றச்சாட்டை பிரதமர் மக்கள் மன்றத்தில் வைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்தும், மகளிர் இடஒதுக்கீட்டை நிறைவேற்ற அரசு கொண்டுள்ள மாற்றுத் திட்டம் குறித்தும் அவர் பேச வாய்ப்புள்ளதாகவும் கணிக்கின்றனர்.


