Last Updated:
El Nino Alert| எல் நினோ மற்றும் சூப்பர் எல் நினோ தாக்கத்தால் தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து, தென்மேற்கு பருவமழை குறைய வாய்ப்புள்ளதாக ஹேமச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எல் நினோ மற்றும் சூப்பர் எல் நினோ தாக்கம் காரணமாக தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிடக் குறைய வாய்ப்புள்ளதாகவும், ஜூன் முதல் செப்டம்பர் மாத இறுதி வரை வெப்பநிலை அதிகமாக நீடிக்கக்கூடும் என்பதால் விவசாயிகள் அதற்கேற்ற பயிர்களைத் தேர்வு செய்து சாகுபடி செய்ய வேண்டும் என்றும் சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில், விவசாயிகளுக்கான “எல் நினோ மற்றும் சூப்பர் எல் நினோ” தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் மற்றும் சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். கருத்தரங்கில் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய ஹேமச்சந்திரன், பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதன் தாக்கத்தால் உலகளவில் காலநிலை மாற்றங்கள் தீவிரமடைந்து வருவதாக தெரிவித்தார். இதன் விளைவாக தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிடக் குறையக்கூடும் என்றும், ஜூன் முதல் செப்டம்பர் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் கூறினார்.
மேலும், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் கடலோர மாவட்டங்களில் இயல்பைவிட அதிக மழைப்பொழிவு பதிவாக வாய்ப்புள்ளதாகவும், புயல்கள் குறுகிய காலத்தில் தீவிரமடையும் சாத்தியம் இருப்பதால் விவசாயிகள் அதற்கேற்ற வகையில் பயிர்களைத் திட்டமிட்டு சாகுபடி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் மரக்கன்றுகளை அதிக அளவில் நடவு செய்வதுடன், மழைநீர் சேகரிப்பு நடவடிக்கைகளிலும் விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
கருத்தரங்கில் கலந்து கொண்ட விவசாயி கலிவரதன் கூறுகையில், “தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் மானாவாரி பயிர் சாகுபடி அதிகரித்து வருகிறது. எல் நினோ தாக்கத்தை கருத்தில் கொண்டு மாற்றுப் பயிர் சாகுபடிக்கும் தயாராகி வருகிறோம். அதேபோல், வடகிழக்கு பருவமழை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் சம்பா பருவத்திற்கு ஏற்ற நெல் ரகங்களைப் பயிரிடவும் திட்டமிட்டுள்ளோம். மேலும், வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் பணிகளையும் தொடங்க உள்ளோம். இந்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது” என்றார்.
Jun 14, 2026 11:16 AM IST

