Last Updated:
அகர்கரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தால், புதிய தலைவரைத் தேர்வு செய்ய விளம்பரம் வெளியிட்டு, நேர்காணல் நடத்தும் நடைமுறைகளைப் பின்பற்றக் குறைந்தது ஒரு மாதத்திற்கும் மேலாகும்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) முதன்மை தேர்வுக்குழுத் தலைவராகச் செயல்பட்டு வரும் அஜித் அகர்கரின் (Ajit Agarkar) பதவிக் காலம் விரைவில் நிறைவடைய உள்ளதாகவும், அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்படுவது சந்தேகமே என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிசிசிஐ-யின் வருடாந்திர பொதுக் கூட்டத்திற்குப் (AGM) பிறகு இந்த ஊகங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன.
அகர்கரின் எதிர்காலம் குறித்து இறுதி முடிவு எடுக்க பிசிசிஐ நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாகப் பேசிய பிசிசிஐ செயலாளர் தேவஜித் சாய்கியா, “எங்களுக்கு இன்னும் 15 நாட்கள் அவகாசம் உள்ளது. கிரிக்கெட் உலகில் 15 நாட்கள் என்பது மிக நீண்ட காலம். சரியான நேரத்தில் இதற்கான முடிவை எடுத்து முறைப்படி அறிவிப்போம்” என்று தெரிவித்துள்ளார். அகர்கரின் தற்போதைய ஒப்பந்தம் அக்டோபர் 4-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
சமீபத்தில் இந்திய அணி இங்கிலாந்தில் மேற்கொண்ட சுற்றுப்பயணம் குறித்தான ஆய்வுக் கூட்டத்தில் அகர்கர் பங்கேற்காதது மற்றும் லார்ட்ஸ் ஒருநாள் போட்டிக்கு முன் ரோஹித் சர்மா விவகாரத்தில் தேர்வுக்குழு எடுத்த முடிவில் பிசிசிஐ தலையிட்டது போன்றவை அகர்கரின் பதவிக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தின. டெல்லியில் நடைபெற்ற சமீபத்திய தேர்வுக்குழு கூட்டத்திற்குப் பிறகு, இதுவே தலைவராக அகர்கரின் கடைசி கூட்டமாக இருக்கலாம் என்ற பேச்சுகள் பலமாக எழுந்தன.
அகர்கரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தால், புதிய தலைவரைத் தேர்வு செய்ய விளம்பரம் வெளியிட்டு, நேர்காணல் நடத்தும் நடைமுறைகளைப் பின்பற்றக் குறைந்தது ஒரு மாதத்திற்கும் மேலாகும். எனவே, இடைக்காலத் தலைவராக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா (Pragyan Ojha) செயல்பட வாய்ப்புள்ளது.
அதேவேளையில், புதிய தேர்வுக்குழுத் தலைவராக இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்டர் பார்த்திவ் படேல் (Parthiv Patel) நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அடுத்த 15 நாட்களுக்குள் பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் வரை இந்த விவகாரத்தில் தெளிவு கிடைக்காது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.


