International
oi-Vigneshkumar
காத்மாண்டு: நேபாளத்தில் நேற்றைய தினம் மிக மோசமான ஒரு வெள்ளம் ஏற்பட்டிருந்தது. இந்த வெள்ளத்தால் பலர் உயிரிழந்துள்ள நிலையில், மாயமானவர்களை தேடும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே இமயமலையில் ஏற்படும் மாற்றங்களால் இந்தியாவுக்கும் ஆபத்து இருப்பதாக நேபாள அமைச்சர் நேரடியாக எச்சரித்துள்ளார்.
நேபாளத்தில் நேற்றைய தினம் ஏற்பட்ட வெள்ளம் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த வெள்ளத்தால் இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பல நூறு பேர் மாயமாகி இருக்கும் சூழலில், உயிரிழப்புகள் மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

இந்தியா- நேபாளம்
இதற்கிடையே காத்மாண்டுவில் ஆங்கில ஊடகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நேபாள வெளியறவு துறை அமைச்சரான ஷிஷிர் கானல், “இந்தியா நேபாளம் இடையே கலாச்சாரம் மற்றும் மத ரீதியா தொடர்புகள் இருப்பது அனைவருக்கும் தெரியும். அத்தோடு சேர்ந்து சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களையும் நாம் பகிர்கிறோம். எனவே, வரும் காலத்தில் நாம் அதையும் கருத்தில் கொண்டு நமது உறவுகளை மறுவரையறை செய்ய வேண்டும்” என்றார்.
பேரழிவு
நேபாளத்தில் புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தை சுட்டிக்காட்டிய அமைச்சர் ஷிஷிர், இமயமலையில் ஏற்படும் மாற்றங்கள் அதன் அடிவாரத்தில் இருக்கும் அனைத்து பகுதிகளையும் பாதிக்கக்கூடும் என்றார். அவர் மேலும், “இமயமலையில் எது உருகுகிறதோ, அது நேரடியாக கடலில் சென்று கலக்கும். அது செல்லும் பாதையில் பேரழிவை ஏற்படுத்தும். இதை தான் நம் கண் முன்னால் நேரடியாக பார்த்தோம். இமயமலையில் ஏற்பட்ட ஒரு நிகழ்வால் மிக பெரிய வெள்ளம் ஏற்பட்டது. இது நேபாளத்தின் பல பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தியது.
இந்தியாவுக்கு ஆபத்து
இமயமலை பகுதியில் ஏற்படும் பனிப்பாறை உருகுதல், பனிப்பாறை சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளங்கள் எதிர்காலத்தில் இன்னும் தீவிரமாகலாம் என்பதால் நாம் கவனமாக இருக்க வேண்டும். இமயமலை பகுதியை சுற்றியுள்ள நாடுகள் சுற்றுச்சூழல் ரீதியாக ஒன்றுடன் ஒன்று இணைந்தே உள்ளன. எனவே, பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் மாற்றங்களை சமாளிக்க இந்தியா, சீனா, நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகள் அரசியல் வேறுபாடுகளை தாண்டி ஒத்துழைக்க வேண்டும்.
நமது எதிர்காலம் இமயமலையின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில்தான் உள்ளது. அரசியல் ரீதியாக போட்டி இருக்கலாம். ஆனால், இமயமலைப் பகுதி காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதியாக இருப்பதால் நாம் ஒன்றிணைய வேண்டும். இந்த முறை நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் இந்தியாவின் எல்லை பகுதிகளுக்குள் பெரிய அளவில் செல்லவில்லை. ஆனால், கடந்த காலங்களில் நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. எதிர்காலத்திலும் அது நிச்சயம் ஏற்படக்கூடும்” என்றார்.
இந்திய மாநிலங்கள்
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களிலும் கூட பதற்றத்தை ஏற்படுத்தியது. நேபாள எல்லையை ஒட்டிய பகுதிகளில் வெள்ள அபாயம் குறித்து மாநில அரசுகள் அவசர ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினர். ஏனென்றால் நேபாளத்தில் இருந்து இந்தியாவின் சமவெளிப் பகுதிகளுக்கு பல முக்கிய ஆறுகள் பாய்கின்றன. குறிப்பாக கண்டக் ஆறு, நேபாளத்தில் நாராயணி என அழைக்கப்படுகிறது. அதேபோல கோசி ஆறு இமயமலை மற்றும் திபெத் பகுதிகளில் உருவாகி இந்தியாவுக்குள் நுழைகின்றன.
இதனால் நேபாளத்தில் ஏற்படும் வெள்ளம் மற்றும் பிற இயற்கை பேரழிவுகள் ஒரு அளவை தாண்டி மிக மோசமாக இருந்தால் அது எல்லையை தாண்டி இந்திய பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

