இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இல்லை.. திட்டவட்டமாக சொன்ன சவுதி அரேபியா.. என்ன ஆச்சு?
உலகிலேயே 2வது மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நாடாகவும், இந்தியாவுக்கு முக்கியமான சப்ளையராக இருந்து வரும் சவுதி அரேபியா இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவின் மிக முக்கியமான கச்சா எண்ணெய் போக்குவரத்து தளமாக இருக்கும் கிழக்கு – மேற்கு பைப்லைன் மீது ஹவுதி படைகளை தாக்கிய நிலையில் செங்கடல் வழியாக ஏற்றுமதி செய்யப்படும் சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் மொத்தமாக தடைப்பட்டு உள்ளது.

ஏற்கனவே ஹார்முஸ் வழியாக வரும் கச்சா எண்ணெய் ஈரான் ராணுவம் மூலம் தடைப்பட்ட நிலையில், கடந்த 6 மாதமாக பாம் அல் மண்டெப் வழியாக எரிபொருள் சப்ளை நடந்து வந்தது. ஆனால் ஹவுதி படைகளின் தாக்குதல் மூலம் சவுதியில் இருந்து வரும் கச்சா எண்ணெய் மொத்தமாக தடைப்பட்டு உள்ளது.
ஈரான் போர் துவங்கிய பின்பு வளைகுடா நாடுகளில் இருந்து வெளியே வரும் ஓரே கச்சா எண்ணெய் சப்ளை சவுதி அரேபியாவுடையது, ஆனால் யெமன் நாட்டின் ஹவுதி படைகள் தாக்குதல் மொத்தமாக முடங்க செய்துள்ளது. இதனாலேயே இந்த வாரம் துவங்கியதில் இருந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வந்தது.
சவுதி ஆராம்கோ நேற்று ஐரோப்பாவுக்கான சப்ளையை நிறுத்திய நிலையில் இன்று இந்திய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கான கச்சா எண்ணெய்யை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதனால் இந்தியா உடனடியாக மாற்று கச்சா எண்ணெய் சப்ளையரை தேடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு உள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் அமெரிக்கா 100 சதவீதம் வரி விதிக்கும் மசோதாவை அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் டிரம்ப் எப்போது வேண்டுமானாலும் இதை நடைமுறைப்படுத்தலாம் என அச்சம் நிலவுகிறது.
இதற்கிடையில் உலக நாடுகள் மாற்று எண்ணெய் சப்ளை செய்யும் நாடுகளை தேட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அதாவது சிறிய அளவிலான உற்பத்தி ஆதாரம் கொண்ட நாடுகளை தேடினால் குறைந்த அளவிலான சப்ளையை அதிக விலைக்கும், அதிக போக்குவரத்து கட்டணத்துடன் வாங்க வேண்டியிருக்கும்.
இதேவேளையில் சவுதி அரேபியா தனது கச்சா எண்ணெயை ஓமன் நாட்டின் வழியாக ஏற்றுமதி செய்ய துவங்கியிருக்கும் காரணத்தால் இன்று சர்வதேச பியூச்சர்ஸ் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட 2 சதவீத சரிவை சந்தித்துள்ளது. ஆனால் சப்ளை இயல்பு நிலைக்கு திருப்ப கூடுதல் காலம் எடுக்கும் என்பது தான் அடுத்த முக்கிய பிரச்சனையாக உள்ளது.
கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தையில் தொடர்ந்து சப்ளை பிரச்சனை இருந்து வரும் வேளையில், மத்திய அரசு எரிபொருள் சப்ளையை உறுதி செய்யும் வகையில், திரவ இயற்கை எரிவாயுக்குகான சப்ளையர் எண்ணிக்கையை 6ல் இருந்து 15 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதேபோல் கச்சா எண்ணெய்கான சப்ளையர் நாடுகளின் எண்ணிக்கையை 27ல் இருந்து 41 ஆக உயர்த்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

