Last Updated:
கேரளா கர்நாடகாவில் 21 வழக்குகளில் தேடப்பட்ட சீரியல் கில்லர் அஜிஸ், திருப்பதி அருகே பெண் கொலை வழக்கில் ஆந்திராவில் கைது, போலி ஆதார் ஆட்டோ வழிப்பறி வெளிச்சம்
கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தேடப்பட்டு வந்த சீரியல் கில்லர் ஆந்திராவில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவை சேர்ந்த அஜிஸ் என்பவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை கேரள போலீசார் கடந்த 2018 ஆம் ஆண்டில் கைது செய்தனர். நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றபோது போலீசாரின் கவனத்தை திசை திருப்பிவிட்டு தப்பியோடினார். அவரை மீண்டும் கைது செய்ய கேரளா போலீசார் படாத பாடு பட்டுள்ளனர்.
அப்படி இருந்தும் அவரின் இருப்பிடத்தை நெருங்க முடியாமல் போயுள்ளது. அஜிஸ் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என்று அறிவித்தும் ஒரு துபபும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் கடந்த ஜனவரி மாதம் ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே ராமச்சந்திராபுரத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். பின்னர், அவருடைய ஆதார் கார்டை வாங்கி பரிசோதித்த போது சந்தேகம் எழுந்துள்ளது. உடனே கை ரேகை பதிவுகளை பரிசோதித்ததில், அந்த நபர் கேரள போலீசாரால் தேடப்பட்டு வந்த சீரியல் கில்லர் அஜிஸ் என்பது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் ஆந்திராவுக்கு ஓடி வந்த அவர், ஆட்டோ ஓட்டியதுடன் ஹோட்டலிலும் வேலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், விஸ்வநாத் என்பவரின் ஆதார் அட்டையில் தன்னுடைய புகைப்படத்தை ஒட்டியுள்ளார். அதன் மூலம் போலி ஆதார் அட்டையை அதே பெயரில் தயார் செய்துள்ளார். திருப்பதியில் அவருக்கு அறிமுகமான பெண் ஒருவரின் உதவியுடன் சொந்தமாக ஆட்டோ வாங்கி, அதில் சென்றபடி வழிப்பறி, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதில், திருப்பதி அருகே பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்த ஆந்திர போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அஜிஸுக்கு அடைக்கலம் கொடுத்த பெண்ணையும் கைது செய்துள்ளனர். கைதானவர்களிடம் இருந்து சுமார் 16 சவரன் தங்க நகைகள், 20 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் குற்றச் சம்பவங்களுக்கு பயன்படுத்திய ஆட்டோ ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடந்த எட்டு ஆண்டுகளாக கேரள போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த சீரியல் கில்லர், ஆதாரில் அடையாளத்தை மாற்றி பதுங்கியதை கண்டுபிடித்து ஆந்திராவில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


