2025-26 நிதியாண்டில் மட்டும் இந்த கோயிலுக்கு சுமார் 182 கோடி ரூபாய் வருமானம் கிடைத்ததாக கூறப்படும் நிலையில், தற்போது உண்டியல் காணிக்கை தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அயோத்தி ராமர் கோயில் காணிக்கை முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பேசப்பட்டு வரும் நிலையில், சித்திவிநாயக் கோயிலிலும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 18 கோடி ரூபாய் அளவுக்கு காணிக்கை பணம் கையாடல் செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கோயில் அறங்காவலர்கள் தரப்பில் எழுப்பப்பட்ட சந்தேகங்களின் அடிப்படையில், காணிக்கை பெட்டியிலிருந்து பணம் திருடியதாக 9 ஊழியர்கள் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், காணிக்கைப் பெட்டியில் இருந்த பணத்தை நேரடியாக எடுப்பது மட்டுமின்றி, “ஸ்கிம்மிங்” எனப்படும் முறையில் கணக்கில் வராமல் பணத்தை கையாடியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ராஜேந்திர பெண்டுர்கர் என்பவர் 2009-ம் ஆண்டு முதல் கோயிலில் பணியாற்றி வந்தவர் என்றும், அவருடன் மேலும் 8 நிரந்தர ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஊழியர்கள் கைது செய்யப்படுவதற்கு முன்பு, ஒவ்வொரு புதன்கிழமையும் உண்டியலில் சராசரியாக 50 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலாகி வந்துள்ளது.
ஆனால், கைது நடவடிக்கைக்குப் பிறகு அதே நாளில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை காணிக்கை பணம் வசூலாகத் தொடங்கியதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, பல ஆண்டுகளாக உண்டியல் காணிக்கையில் பெருமளவு பணம் கையாடல் செய்யப்பட்டிருக்கலாம் என்றும், ஆண்டுக்கு சுமார் 18 கோடி ரூபாய் வரை கோயிலுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான காணிக்கை வருவாய் முழுமையாக தணிக்கை செய்யப்பட வேண்டும் என்றும், இந்த முறைகேடு தொடர்பாக ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் பிற விசாரணை அமைப்புகள் மூலம் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோயில் நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 9 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து ஆரம்ப கட்டமாக 80 ஆயிரம் ரூபாய் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், கையாடல் செய்யப்பட்ட உண்மையான தொகை பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, விஐபி தரிசனத்திற்காக பணம் வசூலித்தது, வரிசையை மீறி தரிசனம் ஏற்பாடு செய்தது உள்ளிட்ட பழைய முறைகேடுகளும் மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளன. இதனால், கோயிலின் நிதி பரிவர்த்தனைகள் அனைத்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையாக விளங்கும் சித்திவிநாயக் கோயிலில், காணிக்கை பணம் கையாடல் செய்யப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு, பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

