Last Updated:
ஆடி மாதக் கடைசி செவ்வாய் மற்றும் ஆவணி மாத தொடக்கத்தினை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர்ச்சந்தை தமிழகத்தின் மிகப்பெரிய மலர் சந்தையாகும். இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் பூக்கள் தோவாளை மலர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இங்கிருந்து திருவனந்தபுரம் உள்பட கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் விற்பனைக்காகப் பூக்கள் வாங்கிச் செல்லப்படுகின்றன.
தோவாளை மலர்ச் சந்தையில் நேற்று மல்லிகை ரூ.350க்கும், பிச்சி ரூ.400க்கும், சம்பங்கி ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு பூக்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
அதன்படி, பிச்சிப்பூ கிலோ ரூ.600க்கும், மல்லிகைப்பூ கிலோ ரூ.700க்கும், அரளிப்பூ கிலோ ரூ.100க்கும், வாடாமல்லி கிலோ ரூ.80க்கும், கேந்தி பூக்கள் கிலோ ரூ.100க்கும், சம்பங்கி கிலோ ரூ.300க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.700க்கும், ரோஸ் கிலோ ரூ.180க்கும் விற்பனையாகிறது.
மேலும், ஸ்டெம்ப்ரோஸ் ஒரு கட்டு ரூ.300க்கும், துளசி கிலோ ரூ.50க்கும், தாமரைப் பூ ஒன்று ரூ.10க்கும், மரிக்கொழுந்து கிலோ ரூ.150க்கும், செவ்வந்தி கிலோ ரூ.250க்கும் விற்கப்படுகிறது.
இதுகுறித்து தோவாளை மலர் சந்தையை சேர்ந்த வியாபாரி பெருமாள் கூறுகையில், “ஆவணி மாதத்தில் கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஓணம் பண்டிகை போன்று ஏகப்பட்ட பண்டிகை தினங்கள், சுபமுகூர்த்த தினங்கள் வருவதால் இன்று முதல் பூக்களின் விலை பல மடங்கு உயர வாய்ப்புள்ளது.
மேலும் பூக்களின் தேவைக்கேற்ப பூக்களின் வரத்து வெளி மாவட்டங்களில் இருந்து தோவாளை மலர் சந்தைக்கு குறைவாக வருவதால் அதன் காரணமாகவும் பூக்களின் விலை அதிகரிக்கும். கடந்த வார ஒப்பீடுகளில் இந்த வாரத்தில் பூக்களின் விலை சற்று அதிகமாக உள்ளது. வரும் வாரங்களில் இதைவிட அதிகரிக்க வாய்ப்பு உள்ளது” என தெரிவித்தார்.
Kanniyakumari,Tamil Nadu
August 12, 2025 2:39 PM IST

