Last Updated:
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தூதர் கோர் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவருக்கும் இடையேயான நெருக்கமான நட்பு மற்றும் இருநாட்டு உறவுகளின் தற்போதைய நிலை குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் செர்ஜியோ கோர், சமீபத்தில் வாஷிங்டனில் நடைபெற்ற ‘USISPF தலைமைத்துவ மாநாடு 2026’ இல் பேசும்போது இந்த விபரங்களைப் பகிர்ந்து கொண்டார்.
சில மாதங்களுக்கு முன்பு மியாமியில் நடைபெற்ற ஒரு பிரம்மாண்ட மல்யுத்த (UFC) போட்டியின் இடைவேளை பகுதியில் அதிபர் டிரம்புடன் தான் பேசிக்கொண்டிருந்ததாக செர்ஜியோ கோர் குறிப்பிட்டார்.
அப்போது திடீரென அதிபர் டிரம்ப், “நாம் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் அழைக்கலாமா?” என்று கேட்டுள்ளார். அதற்குத் தூதர் கோர், “இப்போது இந்தியாவில் காலை 6 மணி இருக்கும்” என்று நினைவூட்டியுள்ளார். அதற்கு டிரம்ப் சற்றும் யோசிக்காமல், “அவர் இந்நேரம் எழுந்திருப்பார், அவர் என்னைப்போலத்தான்… அவரும் தூங்குவதில்லை” என்று பதிலளித்துள்ளார்.
டிரம்ப் உடனடியாக மேடைக்குச் செல்ல வேண்டியிருந்ததால், அந்தப் பேச்சுவார்த்தை அடுத்த நாளுக்கு மாற்றப்பட்டது. இந்த நிகழ்வு இரு தலைவர்களுக்கும் இடையே இருக்கும் மிக நெருக்கமான தனிப்பட்ட நட்பைக் காட்டுவதாக தூதர் விவரித்தார்.
எல்லா விஷயங்களையும் ஆறு வாரங்களுக்கு முன்பே திட்டமிட்டுச் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும், உண்மையான நண்பர்கள் எப்போது வேண்டுமானாலும் தன்னிச்சையாகப் பேசிக்கொள்ளலாம் என்பதற்கு இதுவே சான்று என்றும் அவர் கூறியுள்ளார்.
மற்ற உலகத் தலைவர்களைக் காட்டிலும் பிரதமர் மோடியை அதிபர் டிரம்ப் மிக உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்ப்பதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
அரசியல் மற்றும் வர்த்தக ரீதியாக, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தூதர் கோர் தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டின் இறுதியில் (டிசம்பர் 14-15, 2026) புளோரிடாவில் உள்ள டிரம்ப் நேஷனல் டோஹ்ரல் ரிசார்ட்டில் நடைபெறவிருக்கும் 21-வது ஜி20 (G20) மாநாட்டில் பங்கேற்கப் பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல உள்ளார்.
இந்த மாநாட்டிற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஏற்கனவே பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு (2027) அதிபர் டிரம்ப் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
“அவரும் என்னை மாதிரிதான், தூங்க மாட்டார்!” – பிரதமர் மோடி குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிர்ந்த சுவாரசிய தகவல்!


