கோலாலம்பூர்:
தமது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்வதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து டி.ஏ.பி ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவர் தோனி புவா மீண்டும் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறான தகவல்களைக் கூறி தனது பெயரைக் கெடுக்கும்போது, தற்காப்புக்காக வழக்குத் தொடுத்தால் மேலும் பல போலீஸ் புகார்களை எதிர்கொள்ள நேரிடுமா என்று அவர் தமது முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும், ஷா ஆலாம் எல்.ஆர்.டி 3 (LRT3) திட்டம் தொடர்பாக சிலாங்கூர் சுல்தான் ஷரஃபுடின் இட்ரிஸ் ஷா அண்மையில் வெளியிட்டிருந்த அரச உரைக்குப் பின்னரே தோனி புவா இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
மலேசியாவில் மன்னராட்சி முறை மற்றும் அரசியல் சாசனம் குறித்து தோனி புவா கடந்த மே மாதம் கருத்து தெரிவித்திருந்த நிலையில், அவர் மீது ஏற்கனவே போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு வாரங்களில் இரண்டாவது முறையாக இத்தகைய கருத்துக்களை அவர் முன்வைத்துள்ள வேளையில், அரச குடும்பத்தினர் அரசியலில் ஈடுபடும்போது அவர்களின் கருத்துக்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவையா மற்றும் இதற்கு எதிராகப் பேசினால் தேசத்துரோகச் சட்டம் பாயுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.



