Last Updated:
Clay Water Bottles| கோடை வெயிலில் அதிகரித்த மண்பாண்ட வாட்டர் பாட்டில் விற்பனை
விழுப்புரம் அருகே சாலை அகரம் கிராமத்தில், களிமண்ணால் செய்யப்படும் வாட்டர் பாட்டில் விற்பனை அதிகரித்து வருகிறது. இதனால் மண்பாண்ட தொழிலாளர்கள், வாட்டர் பாட்டில் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தால் பொதுமக்கள் அதிகளவில் அவதிப்பட்டு வருகின்றனர். உடல் சூட்டை தணிக்க சில்லென்ற குளிர் பானங்களை தேடி குடிக்க படையெடுத்துள்ளனர். எப்பவும் தாகம் எடுக்கும் நிலையில் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் மூலம் தண்ணீர் குடிப்பது நம் உடலுக்கு தீங்கு ஏற்படுத்துகிறது. இதனை தவிர்ப்பதற்காக, பாரம்பரிய முறையில் மண்பானை வைத்து குடிநீரை குடிக்கவும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் நவீன காலத்திற்கு ஏற்றவாறு மண்ணால் விதவிதமான முறையில் வாட்டர் பாட்டில்கள் தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு வழக்கத்தை விட கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதற்கு ஏற்ப நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இதனை சமாளிக்க அதிக அளவு நீர் பருக வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.” “நம் அன்றாட பயன்படுத்தும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களில் அடைக்கப்படும், தண்ணீரை கோடை காலத்தில் பயன்படுத்துவதை சற்று குறைத்துக் கொள்ள வேண்டும். இவை உடம்பில் பல்வேறு கோளாறுகள் ஏற்படுத்தும். அதற்கு மாற்றாக மண்பானை குடிநீர் அனைவருக்கும் உகந்ததாக இருக்கும். நவீன வரவுக்கு ஏற்ப அழகான வடிவில் களிமண்ணால் வாட்டர் பாட்டில்கள், பைப் வைத்த மண்ணால் செய்யப்பட்ட வாட்டர் கேன்கள், வாட்டர் ஜக்குகள், டம்ளர்கள் என விதவிதமாக செய்யப்படுகின்றன. ஒரு வாட்டர் பாட்டில் செய்து முடிப்பதற்கு 8 நிமிடங்கள் குறைந்தபட்சம் ஆகிறது” என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
“அரை லிட்டர், 1 லிட்டர் அளவுகளில் தேவைக்கேற்ப கிடைக்கிறது. இதில் ஊற்றப்படும் தண்ணீர் அரை மணி நேரத்தில் குடிப்பதற்கு ஏற்ற குளுகுளு தன்மையை அடைகிறது” எனவும் “வீட்டில் கரண்ட் செலவு மிச்சம்” எனவும் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
முன்பை விட இந்த வருடம் களிமண்ணால் செய்யப்படும் வாட்டர் பாட்டில்கள் மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. மார்ச் மாதம் முதல் மண் பானையால் செய்யப்படும் வாட்டர் பாட்டிலுக்கு தேவை தற்போது அதிகரித்துள்ளது.
அரை லிட்டர் கொண்ட வாட்டர் பாட்டில் முதல் 1 லிட்டர் அளவு வரை வாட்டர் பாட்டில் தயார் செய்து விற்கப்படுகிறது. இதன் விலை 100 ரூபாயில் தொடங்கி 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
கடந்த ஆண்டு 5000 வாட்டர் பாட்டில்கள் ஆர்டர்கள் வந்த நிலையில், இந்த வருடம் பத்தாயிரம் வாட்டர் பாட்டில் ஆர்டர்கள் வந்துள்ளன. “ஆனால் இந்த ஆர்டர்களை செய்வதற்கு ஆட்கள் தான் பற்றாக்குறையாக இருக்கிறது” என தொழிலாளர்கள் தெரிவித்தனர். “இங்கு தயார் செய்து, விற்பனை செய்யப்படும் வாட்டர் பாட்டில்கள் சென்னை, கோயம்புத்தூர், பெங்களூர், பாண்டிச்சேரி, தர்மபுரி மற்றும் வெளிநாடுகளுக்கும் கூட அனுப்பி வைக்கப்படுகிறது” என வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
April 06, 2025 11:45 AM IST

