சர்வதேச அளவில் தேடப்பட்டு வந்த பிரபல குற்றவியல் கும்பலின் தலைவர் என சந்தேகிக்கப்படும் டேனியல் கினஹான், ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) கைது செய்யப்பட்டு அயர்லாந்துக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் அயர்லாந்து அரசுக்கு சொந்தமான சிறப்பு விமானம் மூலம் துபாயிலிருந்து டப்ளின் நகருக்கு அவர் அழைத்து வரப்படவுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் சர்வதேச குற்றவியல் அமைப்பை வழிநடத்திய குற்றச்சாட்டுகளுக்காக அங்குள்ள நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
முறைப்படி கைது
விமானப் போக்குவரத்து தகவல்களின்படி, கினஹானை ஏற்றிச் சென்ற சிறப்பு விமானம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1:19 மணிக்கு துபாயில் இருந்து புறப்பட்டுள்ளது.

டப்ளின் விமான நிலையம் வந்தடைந்ததும் கினஹான் உடனடியாக காவல்துறையினரால் முறைப்படி கைது செய்யப்பட்டு, நடுவர்கள் இல்லாத (Non-Jury) சிறப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் (Special Criminal Court) முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
கைதியை அழைத்துச் செல்வதற்காக அயர்லாந்து சிறைச்சாலைத் துறை புதிதாக தோட்டாக்கள் மற்றும் வெடிகுண்டுகளால் துளைக்க முடியாத (Bulletproof & Bomb-proof) சிறப்புப் பாதுகாப்பு வாகனத்தைப் பயன்படுத்துகிறது.
பாதுகாப்பு வசதிகள்
கினஹானின் வருகையையொட்டி அயர்லாந்து காவல்துறையினர் (Gardaí), ஆயுதம் ஏந்திய சிறப்புப் படையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து மிகப்பெரிய அளவிலான பாதுகாப்பு வளையத்தை அமைத்துள்ளனர்.

விசாரணை முடியும் வரை அவர் அடைக்கப்படவுள்ள மிக உயர்மட்ட பாதுகாப்பு கொண்ட போர்ட்லாயிஸ் (Portlaoise) சிறைச்சாலையின் உள் மற்றும் வெளிப் பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
கினஹான் மற்றும் அவரது குடும்பத்தினர் சர்வதேச அளவில் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.
பொருளாதாரத் தடைகள்
இந்தநிலையில் பல தசாப்தங்களாக நடைபெறும் பல்வேறு கொலைச் சம்பவங்களுக்கும் இவர்களது கும்பலுக்கும் தொடர்புள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்க அரசால் சர்வதேச அளவிலான குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, இவருக்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

அதேவேளையில், கினஹான் மீதான குற்றச்சாட்டுகளை அவரது வழக்கறிஞர்கள் முற்றிலுமாக மறுத்துள்ளனர்.
இந்தநிலையில் கினஹான் மீது இதுவரை எந்தக் குற்றமும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை எனவும் அவர் ஒரு குற்றவியல் கும்பலின் தலைவர் என்று கூறப்படும் செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

