
டெக்சாஸின் கரோல்டன் நகரில் உள்ள கொரியாடவுன் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு தாக்குதல் நடத்தியவரைத் தெரிந்திருக்கலாம் எனக் காவல்துறை தெரிவிக்கிறது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டல்லாஸ் நகருக்கு வடக்கே அமைந்துள்ள கரோல்டன் நகரின் வணிக வளாகம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவிக்கிறது.
இது தற்செயலான தாக்குதல் அல்ல எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தாக்குதல் நடத்திய நபரை முன்பே தெரிந்திருக்கும் சூழல் இருந்ததாகவும் கரோல்டன் நகரத் தலைவர் ராபர்டோ அரெடோண்டோ கூறினார். தாக்குதலுக்குப் பின்னர், சிறிது தூரம் நடந்தே துரத்திச் சென்று சந்தேக நபரைக் கைது செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கொரியாடவுன் என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ள கே டவுன் பிளாசாவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. அதிகாரிகள் தங்கள் துப்பாக்கிகளை நீட்டியபடி கதவுகளைக் கடந்து செல்லும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்தில் எஃப்.பி.ஐ. மற்றும் பிற சட்ட அமலாக்க முகவர்களும் களத்தில் இருந்தனர். டல்லாஸுக்கு வடக்கே 20 மைல்கள் (சுமார் 32 கிலோமீட்டர்) தொலைவில் கரோல்டன் நகரம் அமைந்துள்ளது.
அமெரிக்க மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் தரவுகளின்படி, கரோல்டனின் 1.30 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகையில், 4,000-க்கும் அதிகமானோர் கொரிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். கடந்த 20 ஆண்டுகளில் கொரிய முதலீட்டாளர்களின் பங்களிப்பால் டல்லாஸ் பெருநகரப் பகுதிக்கான ஒரு முக்கிய கொரிய நகரமாக கரோல்டன் வளர்ச்சியடைந்துள்ளது.
எச்-மார்ட் பல்பொருள் அங்காடி போன்ற பெரிய வணிக நிறுவனங்களும், கொரியப் பொரித்த கோழி முதல் பனிக்கூழ் இனிப்புகள் வரை வழங்கும் டஜன் கணக்கான கொரிய உணவகங்களும் இங்கு உள்ளன. மேலும், பாப்டிஸ்ட் முதல் பிரஸ்பைடீரியன் வரையிலான பல கொரிய தேவாலயங்களும் இந்த நகரத்தில் அமைந்துள்ளன.

