நாளையோடு அமெரிக்கா, ஈரான் போர் நிறுத்தம் முடிவடைகிறது.
கடந்த வார இறுதியில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “மீண்டும் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை நடக்கலாம்’ என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், இன்னமும் அது குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஒருவேளை பேச்சுவார்த்தை நடந்தால், அதற்கு அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமை தாங்குவார் என்று நேற்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அவருடன் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னரும் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்துவிட வேண்டும் என்பதில் பாகிஸ்தான் குறியாக இருக்கிறது.
இதற்காக கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 15), பாகிஸ்தானின் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் ஈரானின் தலைநகரான டெஹ்ரானுக்கு மூன்று நாள் பயணம் சென்றிருந்தார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சவுதி அரேபியா, கத்தார், துருக்கி ஆகிய மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றிருந்தனர்.
அமெரிக்கா பக்கம் பேச்சுவார்த்தைக்கு எல்லாம் ‘ஓகே’வாக இருக்க, ஈரான் இன்னும் பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

