அமெரிக்காவின் கடுமையான கடல்சார் பொருளாதார முற்றுகை மற்றும் தடைகளையும் மீறி, ஈரானின் தெற்கு மாகாணமான புஷெஹ்ர் (Bushehr), கடந்த ஐந்து மாதங்களில் 2.3 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிக மதிப்புள்ள பொருட்களை வெற்றிகரமாக ஏற்றுமதி செய்துள்ளது.
இதுகுறித்து புஷெஹ்ர் மாகாண சுங்க அலுவலகத்தின் தலைவர் அலி சுலைமானி (Ali Soleimani) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,
“இந்த ஐந்து மாத காலத்தில் மட்டும் சுமார் 5.1 மில்லியன் மெட்ரிக் டன் பொருட்கள் மாகாணத்தின் சுங்கச்சாவடிகள் மற்றும் துறைமுகங்கள் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கடற்படை கண்காணிப்பு
அமெரிக்காவின் கடற்படை கண்காணிப்பையும் மீறி அனுப்பப்பட்ட இந்த ஏற்றுமதிப் பொருட்களில், பெட்ரோகெமிக்கல் பொருட்கள், பல்வேறு வகையான திரவமாக்கப்பட்ட வாயுக்கள் (Liquefied Gases), சிமெண்ட், கட்டுமானக் கற்கள் மற்றும் கடல் உணவுகள் (மீன், இறால்) ஆகியவை முக்கிய பங்கு வகித்துள்ளன.

குறிப்பாக, இப்பகுதியில் உள்ள ‘பார்ஸ் சிறப்பு பொருளாதார எரிசக்தி மண்டலம்’ (PSEEZ) மட்டுமே ஒட்டுமொத்த ஏற்றுமதி மதிப்பில் 87 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளது.
ஈரான் மீது சர்வதேச அளவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், இந்த ஆண்டில் புஷெஹ்ர் மாகாணம் உலகின் 32 நாடுகளுக்குத் தன் பொருட்களை விற்பனை செய்துள்ளது.
இதில் சீனா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE), பாகிஸ்தான், துருக்கி மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ஈரானிய பொருட்களின் முக்கிய வர்த்தக கூட்டாளிகளாகத் திகழ்கின்றன என்று அலி சுலைமானி சுட்டிக்காட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
