அனைத்து பயிர்க்கடன்களும் தள்ளுபடி? விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றுமா விஜய் அரசு?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பொது பட்ஜெட் வரும் 5ஆம் தேதியும், வேளாண் பட்ஜெட் 6ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட உள்ளன. இந்த பட்ஜெட்டில் தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் அறிவிப்புகள் வெளியாகுமா என விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற உடன் பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட அளவிலான தொகை மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டது. 75,000 ரூபாய் வரையிலான கடன்கள் முழுமையாகவும் அதற்கு மேல் உள்ள கடன்களுக்கு 35,000 ரூபாய் என்றும் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் சிறு, குறு விவசாயிகள் என்ற பாகுபாடின்றி பிப்ரவரி 28, 2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் கேட்டு கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை சேமிக்கும் கிடங்குகளை விரிவாக்கம் செய்ய வேண்டும். நெல்லின் கொள்முதல் விலையை கிலோவுக்கு 24 ரூபாயிலிருந்து 35 ரூபாயாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ஈரப்பதம் என்ற பெயரில் இடைத்தரகர்கள் மூட்டைக்கு 30 முதல் 50 ரூபாய் வரை சட்டவிரோதமாக கமிஷன் வசூலிப்பதை உடனே நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
அடுத்ததாக ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை போன்ற தென் மாவட்ட விவசாயிகளுக்கு நீர் பாதுகாப்பை உறுதி செய்ய, கிடப்பில் உள்ள காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைந்து முடிக்க அறிவிப்பு வெளியிட வேண்டும் என கேட்டு கொண்டுள்லனர்.
அக்ரி அண்ட் ஆல் டிரேட் சேம்பர் அமைப்பின் தலைவர் எஸ். ரத்தினவேலு தி இந்துவுக்கு அளித்துள்ள பேட்டியில், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும், விவசாயத்தை லாபகரமாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.
நீர்நிலைகளை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும், வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை நவீனமயமாக்கி, அங்கு இயந்திரங்கள், சூரியசக்தி உலர்த்திகள், குளிர்பதன கிடங்குகள் மற்றும் நவீன சோதனைக்கூடங்களை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் விவசாயிகள் முன் வைக்கின்றனர். வட மாநிலங்களில் உள்ள பெரிய சந்தை மாதிரிகளை பின்பற்றி, பெரிய விற்பனை மையங்களை உருவாக்க வேண்டும் என்கின்றனர்.
வறட்சி மற்றும் எல் நினோ பாதிப்புகளால் பெரும் இழப்புகளை சந்தித்துள்ள விவசாயிகள், தங்களுக்கு உரிய இழப்பீடும், தொலைநோக்கு பார்வையில் உள்கட்டமைப்பு வசதிகளும் தேவை என்கின்றனர். விஜய் தேர்தலுக்கு முன்னர் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை தரும் அரசாக தனது அரசு இருக்கும் என கூறி இருந்தார். அதனை இந்த பட்ஜெட்டில் வெளியாகும் அறிவிப்புகள் மூலம் பூர்த்தி செய்வாரா என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

