அதே ‘பூதம்’! 8000 வங்கி ஊழியர்கள் பணிநீக்கம்.. ஐடி துறையை போலவே வங்கிகளிலும் பணிநீக்கம்!
உலகளவில் வங்கி சேவைகள் கடந்த 20 வருடங்களாக பெரிய அளவில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரும் வேளையில், இந்தியாவில் இதன் வேகம் குறைவு என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் லேட்டாக துவங்கினாலும் வேகமாக ரேசில் முன்னேறி வருகிறது.
கடந்த 10 வருடத்தில் இந்தியாவில் அனைத்து வங்கிகளும் ஆட்டோமேஷன், ஏஐ, டிஜிட்டல் இன்பரா என முதலீடு செய்த நிலையில் இந்திய வங்கித்துறையில் சேவை தரம் பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இந்த சேவைகளை மக்களும் பெரிய அளவில் பயன்படுத்த துவங்கிய காரணத்தால் வங்கிகளும் இதன் மூலம் பலன் அடைய துவங்கியுள்ளது, இதன் விளைவு ஆட்குறைப்பு.

பொதுவாக இந்திய வங்கிகள் அதிகளவில் ஊழியர்களை பணியில் சேர்க்கும் வழக்கத்தை கொண்டு இருக்கும், ஆனால் மக்கள் தற்போது டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்த துவங்கிய காரணத்தால் வங்கி இயக்கத்தில் ஆட்கள் தேவை பெரிய அளவில் குறைந்து வருகிறது.
இதன் எதிரொலியாக இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஊழியர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைய துவங்கியுள்ளது. ஏஐ, ஆட்டோமேஷன் போன்றவற்றால் ஐடி மற்றும் டெக் துறையில் பணிநீக்கம் செய்யப்படுவதை தாண்டி தற்போது இந்திய வங்கித்துறையிலும் எதிரொலிக்க துவங்கியுள்ளது.
இந்தியாலின் முன்னணி தனியார் வங்கிகளான ஹெச்டிஎப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, கோட்டாக் மஹிந்திரா வங்கிகள் பொதுவாக கைப்பிடிக்கப்படும் வர்த்தக வளர்ச்சி = ஆட்கள் சேர்ப்பு கொள்கையில் இருந்து மாறியுள்ளது. கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் ஊழியர்கள் எண்ணிக்கை 8000 பேர் குறைந்துள்ளனர்.
இதில் முக்கியமாக ஹெச்டிஎப்சி வங்கியில் ஊழியர்கள் எண்ணிக்கை 3343 பேர் குறைந்துள்ளதாக தனது 2026ஆம் நிதியாண்டின் முழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து ஆக்சிஸ் வங்கியிள் 3100 பேர் குறைந்துள்ளனர், இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 400 புதிய கிளைகளை இவ்வங்கி திறந்துள்ளது. ஆயினும் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்து அதிகளவில் டெக் சேவைகளை நம்பி இயங்குவது உறுதியாகிறது.
இதேபோல் கோட்டா மஹிந்திரா வங்கியின் சுமார் 1269 பேர் குறைந்துள்ளனர். இந்திய வங்கிகள் மட்டும் அல்லாமல் தற்போது சர்வதேச அளவில் இயங்கி வரும் முன்னணி வங்கிகளான ஜேபி மோர்கன் சேஸ், சிட்டி குரூப், Standard Chartered உட்பட அனைத்து முதலீடு வங்கிகளும் அதிகளவில் ஏஐ தொழில்நுட்பத்தை தனது ஆய்வு பணிகளில் ஈடுப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மூத்த நிலை ஊழியர்கள் முதல் துவக்க நிலை ஊழியர்கள் வரையிலான தேவை பெரிய அளவில் குறைந்துள்ளது.
