அதிபர் பதவியை வைத்து Gambling செய்யும் டிரம்ப்? 3 மாசத்துல கொள்ளை லாபம் பார்த்திருக்கிறாரே..!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகச்சிறந்த ஒரு பிஸ்னஸ் மேன். ரியல் எஸ்டேட் தொடங்கி பல துறைகளிலும் அவரது நிறுவனங்கள் கால் பதித்து வெற்றிகரமாக செயல்படுவது நம் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அவர் அதிபர் பதவியையும் பயன்படுத்தி பல லட்சம் கோடி டாலர் லாபம் பார்ப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குறிப்பாக பங்கு சந்தை வர்த்தகத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முதலீட்டுக் கணக்குகளில் (Investment accounts) ஜனவரி முதல் மார்ச் வரையிலான 90 நாட்களில், ஒரு பெரிய நிதி நிறுவனம் செய்வதை போல மிக தீவிரமாக பங்குகள் வாங்கப்பட்டு, விற்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஒரு தனிநபரால் 90 நாட்களில் 3,642 வர்த்தகங்களை எப்படி மேற்கொள்ள முடியும் என்பது தான் பலரும் எழுப்பும் கேள்வி.

ஜனவரி முதல் மார்ச் வரையிலான வெறும் 90 நாட்களுக்குள் மொத்தம்3,642 வர்த்தகங்கள் டிரம்பின் வர்த்தக கணக்கில் செய்யப்பட்டுள்ளன. இதில் 2,346 பங்கு வாங்கும் பரிவர்த்தனைகளும், 1,296 பங்கு விற்பனை பரிவர்த்தனைகளும் அடங்கும். இந்த பங்கு வர்த்தகம் மூலம் சுமார் 212 மில்லியன் முதல் 695 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பங்குகள் மற்றும் நிதிகள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு முந்தைய 2025-ஆம் ஆண்டின் கடைசி இரண்டு மாதங்களில் வெறும் 191 பரிவர்த்தனைகள் மட்டுமே நடந்திருந்த நிலையில், திடீரென இந்த எண்ணிக்கை 3,600-ஐத் தாண்டியுள்ளது. டிரம்ப் தரப்பு தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளில் தான் அதிக ஆர்வம் காட்டியுள்ளது. மைக்ரோசாப்ட், அமேசான் , மெட்டா , நெட்ஃபிலிக்ஸ் , ஆரக்கிள் மற்றும் ஏஎம்டி போன்ற நிறுவனங்களின் பங்குகள் தலா 17 முதல் 22 முறை வாங்கப்பட்டு விற்கப்பட்டுள்ளன.
பிப்ரவரி 10 அன்று ஒரே நாளில் மைக்ரோசாப்ட், அமேசான், மெட்டா ஆகிய நிறுவனங்களின் பெரிய அளவிலான பங்குகள் அதாவது ஒவ்வொன்றும் 5 மில்லியன் முதல் 25 மில்லியன் டாலர் மதிப்பு கொண்டு விற்கப்பட்டன. மார்ச் 23 அன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 283 பங்கு வாங்கும் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. செய்யப்பட்டுள்ளது.
டிரம்பின் அரசு எடுத்த சில முக்கிய முடிவுகளுக்கும், இந்த பங்கு வர்த்தகம் நடந்த நேரத்திற்கும் (Timing) நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறி எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். ஜனவரி 6 அன்று டிரம்பின் கணக்கில் $5,00,000 முதல் $10,000,000 டாலர் மதிப்பிலான ‘என்விடியா’ பங்குகள் வாங்கப்பட்டன. அடுத்த வாரமே, அமெரிக்க அரசு என்விடியா நிறுவனத்தின் AI சிப்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது.
மார்ச் மாதத்தில் பலான்டிர் நிறுவனத்தின் பங்குகள் வாங்கப்பட்டன. அதன்பின் ஏப்ரல் 7 அன்று டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் இந்த நிறுவனத்தைப் பாராட்டிப் பதிவிட்டார். Eli Lilly மருந்து நிறுவனத்தின் பங்குகளும் வாங்கப்பட்டன. அதே காலகட்டத்தில் இந்த நிறுவனத்தின் உடல் எடையைக் குறைக்கும் மருந்து வணிகத்திற்கு (GLP-1 business) சாதகமாக அமெரிக்க அரசு சில முக்கிய முடிவுகளை எடுத்தது.
அமெரிக்க செனட்டர் எலிசபெத் வாரன் போன்ற அரசியல்வாதிகள், இதில் ஏதேனும் உள்விவரங்களைப் பயன்படுத்தி வர்த்தகம் செய்யும் சட்டவிரோத ‘இன்சைடர் டிரேடிங்’ (Potential insider trading) நடந்துள்ளதா என்று விசாரணை நடத்த கோரியுள்ளனர். ஆனால் டிரம்ப் ஆர்கனைசேஷன் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. அதிபர் டிரம்பிற்கும் இந்த வர்த்தகங்களை நேரடியாக நிர்வகிப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், இவை சுயாதீனமாக நிர்வகிக்கப்படும் கணக்குகள் என்றும் விளக்கம் அளித்துள்ளது. சில நிபுணர்கள் இது வரி சேமிப்புக்கான ஒரு சாதாரண முதலீட்டு நடவடிக்கை என கூறுகின்றனர். இருந்தாலும் டிரம்ப் அதிபர் பதவியை தவறாக பயன்படுத்தி லாபம் பார்க்கிறாரா என்ற சந்தேகத்தையும் சிலர் கிளப்புகின்றனர்.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வெள்ளை மாளிகை அதிகாரிகளும், டிரம்பின் நிறுவனமும் விளக்கம் அளித்துள்ளன. இந்த வர்த்தகங்களை டிரம்ப்போ அல்லது அவரது குடும்பத்தினரோ நேரடியாகச் செய்யவில்லை. அவரது சொத்துக்கள் அனைத்தும் மூன்றாம் தரப்பு நிதி நிறுவனங்களால் (Third-party financial institutions) முற்றிலும் தானியங்கி முறையில் (Automated Systems) நிர்வகிக்கப்படுகின்றன. எந்தப் பங்குகளை வாங்க வேண்டும், விற்க வேண்டும் என்பதில் டிரம்ப்பிற்கு எந்தவிதத் தொடர்போ அல்லது முன்கூட்டிய தகவலோ கிடையாது என்று அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

