Last Updated:
முலாயம் சிங் யாதவின் மகன், அகிலேஷ் யாதவின் தம்பி பிரதீக் யாதவ் 38 வயதில் லக்னோவில் மரணம், காரணம் கண்டறிய பிரேதப் பரிசோதனை, உத்தரபிரதேச அரசியல் அதிர்ச்சி
உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சியை நிறுவியவருமான மறைந்த முலாயம் சிங் யாதவின் மகன் பிரதீக் யாதவ் 38 வயதில் காலமானார். அகிலேஷ் யாதவின் சகோதரர் இவர்.
முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது இரண்டாவது மனைவி சாதனாவின் மகன் பிரதீக் யாதவ். இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் MBDA பட்டம் பெற்றிருந்த பிரதீக் யாதவ், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். பிரதீக் யாதவின் மனைவி அபர்ணா யாதவ் உத்தரப் பிரதேச பாஜக மகளிர் அணி தலைவி. அபர்ணாவுக்கும் பிரதீக் யாதவுக்கும் அண்மையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை 6.15 மணிக்கு பிரதீக் யாதவை அவரது குடும்பத்தினர் மயங்கிய நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிரதீக் யாதவ் மருத்துவமனைக்கு கொண்டுவந்த நேரத்தில் அவரது மனைவி அங்கு இல்லை.
பிரதீக் யாதவ் சுயநினைவின்றி லக்னோவில் உள்ள சிவில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டதாகவும், அங்கு அவர் வந்தடைந்தவுடனேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்ததாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. மருத்துவர்கள் குழு, மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய உடலுக்குப் பிரேதப் பரிசோதனை செய்யவுள்ளது. முதற்கட்ட ஆய்வின்படி, உடலில் காயங்களுக்கான வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது.
பிரதீக் யாதவ் மற்றும் அபர்ணா யாதவ் 2011-ல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த ஜனவரியில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்யப்போவதாக அறிவித்தனர். எனினும் இதுவரை அந்த நடவடிக்கையை எடுக்கவில்லை. ஆனாலும், “சுயநலப் பெண்ணை நான் கூடிய விரைவில் விவாகரத்து செய்யப் போகிறேன். அவள் என் குடும்ப உறவுகளைச் சீர்குலைத்துவிட்டாள். அவள் விரும்புவதெல்லாம் புகழும் செல்வாக்கும் பெறுவதுதான்” என்று அண்மையில் பிரதீக் யாதவ் இன்ஸ்டாகிராம் பதிவில் எழுதியிருந்தார்.
முலாயம் சிங் யாதவின் குடும்ப உறுப்பினர்களைப் போலல்லாமல், பிரதீக் யாதவ் தீவிர அரசியலில் இருந்து விலகியே இருந்தார். ரியல் எஸ்டேட் தொழில் ஈடுபட்டு வந்த அவர், உடற்பயிற்சி ஆர்வலராகவும் அறியப்பட்டார். அது சார்ந்த தொழில்களில் மட்டுமே செய்து வந்தார். எனினும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கும் அவரது ஒன்றுவிட்ட சகோதரர் பிரதீக் யாதவுக்கும் இடையே மிகவும் நல்ல உறவு இருந்தது. அகிலேஷ் தனது தம்பியை மிகவும் நேசித்தார். இந்த நிலையில் பிரதீக் யாதவின் மரணம் உத்தரப் பிரதேச அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


