பலத்த காயமடைந்த சாகர் ராணா அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மல்யுத்த வீரர் சுஷில் குமார் நீதிமன்றத்தில் பரபரப்பு வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.
ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார், சாகர் ராணா கொலை வழக்கில் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் சுஷில் குமாரும், அவரின் உதவியாளரும் கைது செய்யப்பட்டனர்.
இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், மல்யுத்த போட்டியின் முன்னாள் தேசிய சாம்பியனான மற்றொரு வீரர் சாகர் ராணா என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 4ந்தேதி டெல்லியில் உள்ள சத்ராசல் அரங்கில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் சாகர் ராணா கடுமையாக தாக்கப்பட்டார்.
பலத்த காயமடைந்த சாகர் ராணா அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுஷில் குமாரை தேடி வந்தனர். சுஷில் குமார் ஹரிதுவார், மீரட் என பல இடங்களுக்கு தப்பி சென்று தலைமறைவானார்.
தீவிரமாக தேடப்பட்டு வந்த சுஷில் குமார் நேற்று காலை டெல்லியில் கைது செய்யப்பட்டார். அவரும் அவரது உதவியாளர் அஜய்யும் ஸ்கூட்டரில் யாரிடமோ பணம் பெறுவதற்காக சென்ற போது சுற்றி வளைத்துப் பிடிக்கப்பட்டனர்.
அவர்கள் செல்போன் எதையும் பயன்படுத்தாமல் இருந்து வந்ததால், அவர்களை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுஷில் குமாரை நீதிமன்ற காவலில் சுமார் 30 நிமிடங்களாக தனிப்படை காவல்துறையினர் விசாரணை செய்தனர். அதில், சம்பவ தினத்தன்று சுஷில் குமார், அங்கு தான் இருந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், சாகர் ராணா தாக்கப்படுவதை சுஷில் குமார் தனது சக நண்பர் பிரின்ஸ் என்பவரிடம் வீடியோ எடுக்க சொன்னதாகவும், அதை வைரல் ஆக்கினால், இனி யாரும் சுஷில் குமாரை எதிர்த்து நிற்கமாட்டார்கள் எனத்தெரிவித்தாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.