கர்நாடகத்தில் ஒரே நாளில் நிகழ்ந்துள்ள பல்வேறு சாலை விபத்துகளில் 50க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் உயிரிழந்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை காலை தொடங்கி, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வரையிலான 24 மணி நேரத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிகழ்ந்துள்ள சாலை விபத்துகளில் 51 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிகப்பட்டுள்ளது.
சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களில் இருசக்கர வாகன ஓட்டிகளே அதிகம். ஒட்டுமொத்தமாக 51 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதில் 30 பேர் இருசக்கர வாகனங்களில் பயணித்தோர் என்றும் தெரிய வந்துள்ளது.
கர்நாடகத்தில் நெடுநாள்களுக்கு பின், ஒரே நாளில் இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், பெரும்பாலான விபத்துகளுக்கு வாகன ஓட்டிகளின் கவனக்குறைவும், அதிவேகமுமே முக்கிய காரணமென தெரிவித்துள்ளார் பெங்களூரு சாலை பாதுகாப்புப் பிரிவு காவல்துறை ஆணையர் அலோக் குமார்.
சராசரியாக ஒரு நாளில் அதிகபட்சமாக 35 பேர் வரை உயிரிழப்பதாகவும் ஆனால், இது சராசரியாக ஒரு நாளில் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை காட்டிலும் மிக அதிகம் என்ற தகவலையும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருசக்கர வாகனங்களில் செல்வோர், அதிலும் குறிப்பாக இளம் பருவத்தினர் முன்னே செல்லும் கனரக வாகனங்களை அதிவேகத்தில் முந்திச் செல்ல முற்படும்போது நிலைதடுமாறி விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். அதிலும் பெரும்பாலானோர் தலைக்கவசம் அணியாமல் பயணிப்பதால் உயிர்ச்சேதம் ஏற்படுவதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கர்நாடகத்தில் ஒரே நாளில் நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் அதிகபட்சமாக துமக்குரு மாவட்டத்தில் 7 பேரும், ஹாஸன் மாவட்டத்தில் 6 பேரும், பெங்களூரு நகரில் 4 பேரும், கர்வார் மாவட்டத்தில் 3 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் சாலையோர பாதசாரிகள் 8 பேர் இந்த விபத்துகளில் பரிதாபமாக உயிரிழந்திருப்பது பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரவு நேரங்களில் சாலையில் நடந்து செல்வோர், சாலையை கடக்க முற்படும்போது அவர்கள் மீது கவனக்குறைவால் வாகனங்கள் மோதுவதால், நடந்து செல்வோர் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளதாகத் தெரிவிகப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிறன்று காலை, ஹாஸன் மாவட்டத்தில் லாரி மீது கார் மோதியதில் அந்த காரில் பயணித்த 6 வயது சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். காரின் ஓட்டுநர் கண் அயர்ந்ததே இந்த கோர விபத்துக்கான முக்கிய காரணமென விசாரணையில் தெரிய வந்துள்ளது.